அழுக்காய் ஒரு தேவதை .....




அன்றும் பேருந்தில்
குட்டி தேவதை ஒன்று 


அழுக்கு ஆடை உடுத்தி
தலை முடிகள் பறந்து கிடக்க


கைகளிலோ பிச்சை தட்டுமாய்
திரைப்பட பாடல் ஒன்றை
பிழையுடன் உரக்க பாடியபடி 


வயிற்றில் அடித்துக்கொண்டு
அங்கும் இங்கும் ஓடி
யாசித்தபடி ...


காதில் தேனாக ஒலித்தது
அந்த குயிலின் குட்டி குரல்



பட்டுடை அணிந்து
தலையில் பூக்கள் சூடி
கானமேடை ஒன்றின் மேல் அமர்ந்து
தாளம் தட்டி தலை அசைத்து
இவள் பாடும் அழகை
கண்  முன் நிறுத்தி கண்டேன்

காதருகே அதே குரல்
கண் திறந்த போதோ
மீண்டும் அதே வரிகளை பாடி
என்னருகே  கையேந்தியபடி
அந்த சின்ன அழுக்கு தேவதை

நெஞ்சில் வலியுடன்
சட்டைப்பைக்குள் என் விரல்கள்...

~அன்புடன் யசோதா காந்த் ~