பழக்கடை முதல்
பல கடைகளிலும்
குளிர்ந்தும் வியர்த்தும்
குறைவின்றி இருந்தேன் ..
அன்றொருநாள்
பெரியவர் வாங்கிய பலசரக்கோடு
அடைக்கலமானேன்
அழையா விருந்தாளியாய் அடுப்படியில் ..
நிம்மதி நீடிக்கவில்லை
அன்றே அகதியானேன்
குப்பைத்தொட்டியில் தொடங்கி
அன்றிரவே ஆற்றங்கரை ஓரத்தில் ..
விடியவே இல்லை
வேகமாய் வந்த பெருங்காற்றில்
பறந்தேன் பறவை போல் பெருமிதத்தில் .
முடிவு எங்கோ என நினைத்து
முடியும் முன் விழுந்தேன்
முள்வேலி ஒன்றில் ...
படபடத்து சிக்கி தவிக்கிறேன்
கொஞ்சம் காயங்களுடன்
நான் மட்டுமல்ல
அகதிகள் பலர் என்னைப்போல
விடிவிப்பார் எவருமின்றி
தொங்கிக்கொண்டு...
இப்படிக்கு
அழிவே இல்லாத பாலிதீன் பை ..
~ அன்புடன் யசோதா காந்த் ~