மழையே போய் விடு .....









அன்புள்ள மழைக்கு

தவம் செய்து கேட்டும்
 பொழிய மறுப்பாயே..

இன்றோ ...

பொழிந்தாய் ..பொழிகிறாய்
இன்னும்  பொழிவாயோ?

உன்னால் பள்ளங்களும் நிறைந்து
குளம் குட்டை ஆனதே

சாலைகள் மூழ்கி
போக்குவரத்து முடங்கி
வாகனங்கள் வெள்ளத்தில்
கப்பல்கள் போலானதே

ஆற்றோர வீதியோர  குடிசைகள்
இருந்த இடம் தெரியவில்லையே

விவசாயம் செய்த பயிர்களெல்லாம்
உயிரோடே அழிந்து போனதே

கிராமத்து பள்ளிக்கூடமும்
ஒழுக்கினால் மூடி கிடக்கிறதே

எங்க அப்பாவும் வேலையின்றி
வீட்டுக்குள் திணறுகிறாரே

முதல் மழையில் நனைந்ததால்
மூக்கும் ஒழுகி சளி பிடித்து ஆட்டுகிறதே


நீ வராவிட்டாலும் தொல்லை
வந்தாலும் தொல்லை

பெய்தது போதும் மழையே
வந்தவழியே போய்விடு
அன்புடன் சண்டையிடும் சண்டைக்காரி

~அன்புடன் யசோதா காந்த் ~

துணை .....



முதல் ஐந்தில் ...
              தாத்தா உடன் நடந்தேன்
             மாயா ஜால கதைகள் கேட்டு

இரண்டாம் ஐந்தில் ...
                   அப்பா உடன் நடந்தேன்
                 அவரின் அறிவுரைகள் கேட்டு

மூன்றாம் ஐந்தில் ...
                   அண்ணன் துணையில் நடந்தேன்
                    பயமின்றி துணிச்சல் கொண்டு

நான்காம் ஐந்தில் ...
                  காதலனுடன் நடந்தேன்
                 உலகமே என் வசம் என எண்ணி கொண்டு

ஐந்தாம் ஐந்தில் ...
                காதலனே கணவரானபின் அவருடன் நடந்தேன்
              நான் சாய்ந்து கொள்ளும் சுமைதாங்கி அவரென்று

ஆறாம் ஐந்தில் ...
               நான் பெற்ற மகனுடன் நடக்கிறேன்
              என் வயோதிக காலத்தின் நிழற்குடை இவனே என்று

காலகாலமாய் பெண்களின்
எல்லாவயதிலும் இவர்களே துணையாய் ..

~அன்புடன் யசோதா காந்த் ~

சம்பாத்தியம் .....



தாயின் வறுமை அறிந்து
சில்லறைகள் பல சம்பாதித்தது
வாடகை குழந்தையாய்
வழியோரம் பிச்சை எடுக்கும்
ஆறுமாத  பச்சிளம் குழந்தை .....



~அன்புடன் யசோதா காந்த் ~

அழுக்காய் ஒரு தேவதை .....




அன்றும் பேருந்தில்
குட்டி தேவதை ஒன்று 


அழுக்கு ஆடை உடுத்தி
தலை முடிகள் பறந்து கிடக்க


கைகளிலோ பிச்சை தட்டுமாய்
திரைப்பட பாடல் ஒன்றை
பிழையுடன் உரக்க பாடியபடி 


வயிற்றில் அடித்துக்கொண்டு
அங்கும் இங்கும் ஓடி
யாசித்தபடி ...


காதில் தேனாக ஒலித்தது
அந்த குயிலின் குட்டி குரல்



பட்டுடை அணிந்து
தலையில் பூக்கள் சூடி
கானமேடை ஒன்றின் மேல் அமர்ந்து
தாளம் தட்டி தலை அசைத்து
இவள் பாடும் அழகை
கண்  முன் நிறுத்தி கண்டேன்

காதருகே அதே குரல்
கண் திறந்த போதோ
மீண்டும் அதே வரிகளை பாடி
என்னருகே  கையேந்தியபடி
அந்த சின்ன அழுக்கு தேவதை

நெஞ்சில் வலியுடன்
சட்டைப்பைக்குள் என் விரல்கள்...

~அன்புடன் யசோதா காந்த் ~

தூது போ தென்றலே ...








எனை அறியாது ..
உன்னை தொடர்ந்தேன்

விழிகளின் வழியே  காதல்
சொல்ல நினைத்தேன்

விலகிவிடுவாயோ என
மெல்ல பயந்தேன்

அன்பினை வார்த்தைகளாக்கி
கடிதம் வரைய நினைத்தேன்

இதயம் தரும் துணிச்சல்
இந்த விரல்களுக்கு இல்லையே

என் காதலை நீ அறிவாயோ
நானும் சொல்லாமல் இருப்பதோ ?

ஒ தென்றலே தூது செல்வாயோ
காத்திருப்பேன் என்னவள் என் மனதறிய

கேட்பாயோ அவளிடம் ...
அவள்நிலைமையும்  எனைபோல் தானோ  என்று ?

நல்ல பதில் நீ தந்தால் தென்றலே
பூந்தோட்டம் பரிசாய்  தருவேன் நான்  உனக்கு


~அன்புடன் யசோதா காந்த் ~

உயிரே .....













மஞ்சள் நிலவே
மார்கழி பூவே

கொஞ்சும் நேரம்
கைகூடி வந்ததே

நெஞ்சம் உனக்காய்
நிலைகுலைந்து தவிக்குதே

நெருங்கி வா என் அழகே
நிலவுக்கு போய்  மகிழலாம்

அருகில் நீ வந்தால்
அகிலமும் மறந்திடுவேன்

ஆருயிரே  அழைக்கிறேன்
 வா ஒர் உயிராய் கலந்திடுவோம்

காலமெல்லாம்  வாழ்ந்திடுவோம்
காதலெனும் தேசத்தில் ...

~அன்புடன் யசோதா காந்த் ~

பஞ்சம் பசி ...



மண்ணிற்கும் விலையுண்டே
இந்த மனித உயிர்க்கு விலையுண்டா?

குடல் காய்ந்து கருகவா
குடிசையில் பிறந்தோம் ?

மண்ணையும் தின்று பார்த்தோமே
மறுபடியும் பசிக்கிறதே ...

நாடு வளம் பெறுமோ தெரியவில்லையே
ஆனால் எங்களின் சவக்குழிகள் கண்முன் தெரிகிறதே ...

தசைகள் இன்றி தோலும்தான் சுருங்கி போனதே ..
உடலெலும்புகளோ புறம்  ஆனதே ..

முகம்வடிவிழந்து மனித உருவம் மறைகிறதே
வேறேதோ வேற்றுகிரகவாசிபோலானோமே..

~அன்புடன் யசோதா காந்த் ~

வண்ணங்கள் ....



புடைவைகள் உடுத்தினேன் உன் வண்ணத்தில்

பூக்களும் சூடினேன் உன் வண்ணத்தில்

புதுவீட்டின் வர்ணமோ உன் வண்ணத்தில்

வாசலில் கோலமோ உன் வண்ண பொடிகளில்

ஏதேதோ  இன்னும் இன்னும்

உன் வண்ணங்களில் ...

எதுவும் அழகில்லை

அழகு வானவில்லே உன் முன்னில்

~அன்புடன் யசோதா காந்த் ~

கூட்டம் கூட்டமாய்....






பூக்களிடம் கதைபேசி  மயக்கி 
தேன் பருக காத்திருக்கும்
வண்டுகள் கூட்டம்கூட்டாய் 

அரண்மனை கருவூலத்  தேனை 
எதிரிகள் களவாடாமல் இருக்க 
வாளோடு   காவல் காக்கும்
தேனீக்கள் கூட்டம் கூட்டமாய்  ... 

வண்ண வண்ண  ஆடைகளோடு 
வானத்தில் வட்டமிட்டு  
சிறகடித்து பறக்கும் 
வண்ணத்து பூச்சிகள் கூட்டம் கூட்டமாய் ...


இரவினிலே  தீப்பந்தங்களோடு
போராட்டம் நடத்தும் 
மின்மினி பூச்சிகள் கூட்டம் கூட்டமாய் 

உறவுகளுக்கு விருந்து கொடுக்கவும் 
நல்லவையா கெட்டவையோ எதுவானாலும் 
பாட்டு பாடி கூட்டம் கூடும் 
காக்கைகள் கூட்டம் கூட்டமாய் 

ராணுவத்தில் சேர்வதற்க்காய் 
பயிற்சி எடுத்தும் வரிசை நடத்தும் 
எறும்புகள் கூட்டம் கூட்டமாய் 

இத்தனை உயிர்களும் 
கூட்டம் கூட்டமாய் 
தம்முள் ஒற்றுமையாய் 
நாமோ கூடி வாழாது 
வேற்றுமையாய்  ஏனோ ?? 

~ அன்புடன் யசோதா காந்த் ~

கோலங்கள் ....







வண்ண வண்ண  கோல மாவெடுத்து
வாசலில் தினமும் கோலமிட்டு
சின்ன சின்னதாய் போடாமல்
வீதியின் பாதிவரை போடுவதேன் ?

கால் கடுக்க நிற்கும் உன்னை
நானும் நெடுநேரம் காண தானே
இட்ட கோலங்கள் அழியாமலிருக்க
எனது விழிகளை அல்லவா
வாசலில் வைத்தேன்

என்னவேண்டும் என்ற தந்தையிடம்
கோல புத்தகங்களுக்கல்லவா
கோரிக்கை வைத்தேன் ..
எண்ணங்களை கோல பொடிகளாக்கி
நம் காதலை அல்லவா
புள்ளி இட்டு கோலமாக்கினேன் ...

அதிகாலை குளிர் தொல்லை  
மார்கழி வரை காக்க மனமில்லை
வந்து விடு  மனதை தந்து விடு

வரும் காலை பொழுதுகளில்  
நம் வாசலில் நான் கோலமிட
உன் கண்களோ அதை நோக்க
இனிய  நினைவுகளாய்  வாழ்ந்திடுவோம்
அழகாய்  அழியா கோலங்களாய்

~அன்புடன் யசோதா காந்த் ~

தண்ணீர் தண்ணீர் ....











ஏழை மக்களின் உபயோகத்தில்
கூடுதலாய் நாளிதழ்கள் ..


படிப்பதற்க்காய்  மட்டுமல்ல
கழிவுகளை துடைப்பதற்கும்


குடிப்பதற்கே தண்ணீர் இல்லையாம்
கழுவுவதற்க்கோ? இல்லைவே  இல்லை


தண்ணீர் இருந்தும் ......
நாகரீகம் மேலோங்கியதால் 
வெளிநாடுகளிலோ
கழிவறையில் காகிதங்கள்


தண்ணீர் இல்லாமல்   நம் நாட்டிலோ
இன்றும் கிராமங்களிலும்


கழிவுகளை சுத்தம் செய்வதும்
காகிதங்களே....


~அன்புடன் யசோதா காந்த் ~





ஆனந்தம் ....





கைகள் சிரித்தது ..
வளையல் ஓசையில்

கால்களும் சிரித்தது ..
கொலுசு சத்தத்தில்

நம் மனங்கள் சிரித்தது
மட்டில்லா மகிழ்ச்சியில்

இரவும் சிரித்தது ..
நம் இருவரின் நெருக்கத்தில்
       ~அன்புடன் யசோதா காந்த் ~

நீ எங்கே ...??????





அன்பே நீ எங்கே ?

உன் கொஞ்சும் கிளி பேச்சு ..
நீ சிதறவிட்ட சிரிப்பு
 
நீ அழுத கண்ணீர் 
உன் செல்ல சிணுங்கல் 

பொய்யான உன் கோபம் 
முனங்கும் உன்  மௌனம்
 
மயக்கும் உன் பார்வை 
நம் உயிரின் துடிப்பு 

இன்னும் எனக்குள் பசுமையாய் 
நீ இன்றி என் இதயமோ வெறுமையாய் 

~அன்புடன் யசோதா காந்த் ~

ஓயாத அலைகள்............



கடல் அலையே
நீயும் எனை போல்  வழிமேல் விழிவைத்து
யார் வரவை நோக்கி காத்திருக்கிறாயோ ?



என் உள்ளின் தவிப்பை
உன்னுள்ளும் காண்கிறேனே 


சலிப்பின்றி  ஓயாமல்
வந்து வந்து செல்கிறாயே 


திரும்பி செல்லும் உன் முகத்திலோ
மீண்டும் வரும் புறப்பாடே..


விட்டு சென்ற காதலன்
மனம் கனிந்து வருவான் என காத்துருகின்றயோ ?


என் கண்ணீர் உப்பு சுவை சிறிதளவே
நீ வடித்த கண்ணீரோ ..
உப்பாகவே மாறுகிறதே 
!


நம் இருவரின் தேடலின் முடிவேன்றோ ?
போய் சேரா ஊர்தேடி பயணமோ
நீயும் நானும் ..................???????????


~அன்புடன் யசோதா காந்த் ~

பிரிவு ...........




நாள் நட்சத்திரம்
ஜாதக பொருத்தம் பார்த்தும்
வேதங்கள் மந்திரம் ஓதியும்
நவீனமுறையில்  பதிவு செய்தும்
சேர்ந்த திருமண பந்தங்களே ..
 
காலம் சில சென்ற பின்
பிரிவென்று வருகிறதே
இறைவன் படைத்த உயிர்கள் அனைத்தும்
இணைந்து வாழதானே ..
ஐயிந்தறிவுகளே ஆனந்தமாய்
கூடி குலாவுகின்றன நன்றாய்
ஆறறிவு உள்ள நாமோ
விட்டு கொடுக்க மறுத்தும்
அன்பு செய்ய மறந்தும்
அவதி படுவதேனோ ?? 
 
மனங்களை ரணங்களாக்கி
விவாதம் பொதிந்த விவாகரத்துக்களே
பிரிந்த பின்போ துயரத்திலே
ஏனோ இந்த நிலைமை
வாழ்க்கை ஒருமுறையல்லவா 
வாழ்ந்திடுவோம் இன்பமுற
வையகத்திலே....

  ~  அன்புடன் யசோதா காந்த்  ~ 

சண்டை காட்சியும் ...அடியாளும்







கோழியும் .முட்டைகறியும் சமைத்தாள்
பிள்ளைகளுக்கோ தரவில்லை
ஏனோ தானோ வென உணவு  தந்து
பிஞ்சுகளின் பசியாற்றி தானும உண்டாள்
கணவன் வருகை காத்திருந்து
ஒளித்து வைத்த உணவை தந்தாள்
மனதிலோ மருகி உருகி
இறைவா இவருக்கு சக்தி கொடு என
வேண்டினாள்
திரைப்படங்களில் அடியாள் வேடம்செய்யும் கணவனுக்காய்
~அன்புடன் யசோதா காந்த் ~

நாடோடி ...................


பழக்கடை முதல்
பல கடைகளிலும்
குளிர்ந்தும் வியர்த்தும் 
குறைவின்றி இருந்தேன்  ..

அன்றொருநாள்
பெரியவர்  வாங்கிய பலசரக்கோடு
அடைக்கலமானேன் 
அழையா விருந்தாளியாய் அடுப்படியில் ..
நிம்மதி நீடிக்கவில்லை 
அன்றே  அகதியானேன்
குப்பைத்தொட்டியில் தொடங்கி
அன்றிரவே ஆற்றங்கரை ஓரத்தில் ..

விடியவே இல்லை
வேகமாய் வந்த பெருங்காற்றில் 
பறந்தேன்  பறவை போல் பெருமிதத்தில் .
முடிவு  எங்கோ என நினைத்து
முடியும் முன்  விழுந்தேன்
முள்வேலி ஒன்றில் ...

படபடத்து சிக்கி தவிக்கிறேன்
கொஞ்சம் காயங்களுடன்
நான் மட்டுமல்ல 
அகதிகள் பலர்  என்னைப்போல
விடிவிப்பார் எவருமின்றி 
தொங்கிக்கொண்டு...

இப்படிக்கு
அழிவே இல்லாத பாலிதீன் பை ..



~ அன்புடன் யசோதா காந்த் ~