தனிமை .....,,,





பாழடைந்த  கட்டிடத்தில்
தலைகீழாய் வவ்வால் ஒன்று

எங்கோ ஒரு மரத்தில்
பெரிய ஆந்தை ஒன்று

அந்த ஏரிக்கரையில்
சத்தமிடும் தவளை ஒன்று

தெரு மூலையில்
எதையோ பார்த்து குரைக்கும்
கருப்பு நாய் ஒன்று

காரணமே இன்றி
அங்குமிங்கும் குறுக்கே ஓடும்
வெள்ளை பூனை ஒன்று

தனிமையாய் சோக கீதம் பாடும்
சின்ன குயிலொன்று

இவைகளை போல தனிமையில் விட்டத்தை
வெறித்து பார்க்கும்
உனக்காய் தவிக்கும் உயிர் ஒன்று ..

~அன்புடன் யசோதா காந்த் ~

விடைகள் இல்லா வினாக்கள் .....




ஆயிரம் ஆயிரம் துறைகளிலே
ஆதிக்கம் செலுத்துவோரோ
ஆயிரம் ஆயிரமே
ஆள் பலம் பண பலம்
உடையவற்கோ

தரம் இல்லையெனினும்
முதலாய் உயர்பதவிகளில்
கல்வியோ .விளையாட்டிலோ
திறமை உள்ளவரோ
ஏழை என்ற காரணத்தால்
ஏற்றங்கள் எட்டவில்லை
ஏற்றி விடும் ஏணிகளும்
ஏழை அவனுக்கு இல்லை
பட்டங்களும் சான்றிதழ்களும்
வறுமை எனும்
இருண்ட சிறைதனிலே
என்று மாறும் இந்த நிலை ?
விடைகள் இல்லா வினாக்களே ...


~ அன்புடன் யசோதா காந்த் ~

அழகான தேவதைகள் ....................




இது என்ன தேவதைகள் நகரமா ?
பார்க்க ஆயிரம் விழிகள் வேண்டுமோ ?
யாரைத்தான்  வர்ணிப்பது ?

குட்டி குட்டி தேவதைகளும்
அங்கும் இங்குமாய் ...

மூதாட்டிகளும் தேவதைகளே
பிரம்மனுக்கு  ஏன் இந்த ஓரவஞ்சனை ?
இங்கு மட்டும் அழகாய் படைக்க?
சிறுவயதில் படித்திருக்கிறேன்
வானத்து தேவதைகளை
உயரமாய் அழகிய விழிகளோடு ....
இப்போதோ
நேரிலும் காண்கிறேன் ...

அதே தேவதைகளை
ஓவியனாய் நான் இருந்தால்
ஓராயிரம் ஓவியங்கள் தீட்டிருப்பேன்
கவிஞனாய் இருந்தால்
கோடி கவிதைகள் வரைந்திருப்பேன்
அழகான தேவதைகள் ...

   ~ அன்புடன் யசோதா காந்த் ~ 

காற்று...............



காற்றே உன் முகங்கள் எத்தனை ?
நீ செய்யும் செயல்களோ எத்தனை எத்தனை ???


சில்லென்றுசெல்லமாய்  வீசி
என்னை குளிர செய்கிறாய் ...

  தாலாட்டி மெல்லமாய் வீசி ...
திண்ணையில் தாத்தாவை  உறங்க செய்கிறாய் ...

மிதமாய் மோகமாய்  வீசி
பூக்களை தலை ஆட்டி சிரிக்க செய்கிறாய் ...

தட தட  சப்தமாய் வீசி
தொட்டிலில் இருக்கும் குழந்தையை அழ செய்கிறாய் ...

சட்டென்று வேகமாய் வீசி
பாவம் கோழிக்கூட்டின் கதவை உடைக்கிறாய் ...

சுழலாய் சுருண்டு வீசி
புழக்கடையில் கழுவ  கிடக்கும்
பாத்திரங்களை  பறந்திட செய்கிறாய் ...

புயலாய் கோபமாய்  வீசி
முற்றத்து தென்னை மரத்தை சாய்த்தே  விட்டாய் ...

சூறாவளியாய் பாய்ந்து வீசி
எங்க வீட்டு மேல் கூரையை தூக்கி செல்கிறாய் ...

புழுதி கற்றாய் குப்பையாய்  வீசி
சுவாசிக்கும் சுவாசத்தை தடை செய்கிறாய் ..

ஆனால் இறைவனை போல
பிராண வாயு வாக இருந்து
எங்களை உயிர் வாழசெயகிறாய் ...

~அன்புடன் யசோதா காந்த் ~

ராணுவ வீரன் ..




நல்லதொரு வைகாசி மாதமொன்றில்
நல்ல நேரம் கூடிய பொழுதினில்
வீரமிகு ஆண்மகன் கைகள்தனில்
மூன்று முடிச்சு வாங்கிக்கொண்டேன் கழுத்தினில் ..

தீடீரென அழைப்பு வந்ததில்
புறப்பட்டு சென்றான் சடுதியில்
வீரன் அவன் வேலையோ ராணுவத்தினில்
பிரியா விடைகொடுத்தேன் மௌனத்தில் ...

நான் நடந்து போகின்ற வீதிதனில்
வீரன் மனைவி என கேட்கும் வாழ்த்துதனில்
என் மனமோ பிரிவை மறந்து பெருமிதத்தில்
அவனுடன் சேர்ந்திடுவேன் மற்றொரு பொழுதுதனில்
சாய்ந்திடுவேன் வீரனவன் மார்புதனில்
நாட்டுக்காய் ஈன்றிடுவேன் பிள்ளைகள் பல ஆனந்தத்தில்
வளர்ந்திடுவர் வீரமாய் பாரத தாயின் தாலாட்டுதனில் ..
~ அன்புடன் யசோதா காந்த்  ~

அரசியல் ...



அதை தருவோம் இதை தருவோம்
வாழ்க்கை  முறையை மாற்றி விடுவோம்
வசிய வார்த்தைகள் பல கேட்டோம்
சொற்கள்  வீச்சில் நிலை குலைந்தோம்

குழப்பங்களுடன் ஓட்டும் பதித்தோம்
கேட்டவைகள்  கிடைத்திட காத்திருந்தோம்
எதிர் பார்த்ததோ அட்சய பாத்திரம்
கிடைத்ததோ பிச்சை பாத்திரம்

அரசியல் சூதாட்டத்தில் பகடைகளாணோம்
அரசாங்கத்தால் என்றென்றும் ஏமாற்றபட்டோம்

ஒளிவீசும் விடியலுக்காய் விழித்திருப்போம்(???)
~அன்புடன் யசோதா காந்த்~

வானம் ....





நீ எங்கள் பூமி வீட்டின் கூரையல்லவா

உலக நாடுகளை இணைக்கும் பாலமல்லவா

இயற்கை தனை அள்ளி தரும் வாசலல்லவா

இரவு பகலை உணர்த்தும் கடிக்காரமல்லவா
பறவைகளின் விளையாட்டு மைதானமல்லவா


உனை பாடாத கவிஞனும் உண்டோ
வானவில்லில் வர்ணம் காட்டி
வசியம் செய்யும் வல்லபனே

இரவில் உன் அழகை காண
இறைவனும் இறங்கி வருவானே ...


அழகை அள்ளி தெளித்து
நட்சத்திர கோலமிட்டு
திருஷ்டி படாமலிருக்க
நிலவை பொட்டாக்கி...
ஒ வானமே உன்னை
என்னவென்று வர்ணிப்பேன்


~யசோதா காந்த் ~

வாடகை வீடுகள் ......



சரியோ ?தவறோ?தெரியவில்லை
மனதின் வலிகளை மறைக்கவில்லை 

நல்லதும் கண்டேனே தீயதும் கண்டேனே
விவரங்கள் அறிந்த நாள் முதலாய்
 
சொந்தமென்று சொல்ல ஒரு வீடு இல்லை
அவ்வப்போது சொந்தமாய்
வாடகை வீடுகள்தானே...

மாறி மாறி குடி கொண்டோம்
வீடுகளை மட்டுமல்ல
கல்விகூடங்களையும்தானே 

புது புது மனிதர்கள் அறிமுகமாய்
நண்பர்கள் கூட்டம் தாராளமாய்..
 
தடைகளோ எங்களுக்கு ...
வாழும் வாழ்கையிலும்
வசிக்கும் வீடுகளிலும்..
.
சுவரில் ஆணி அடிக்க தடை
பத்து மணிக்கு மேல்
விளக்கு எரிக்க தடை 

உரக்க பேசி சிரிக்க தடை
சொந்த பந்தங்கள் வருவதிலும் தடை 

வாளி தண்ணீர் ஒன்றுக்கு மேல்
குளிக்க தடை 

சில தடைகளை சொல்வதற்கே
எனக்குள் வெட்க தடை...

சரியாய் வாடகை பணம் கொடுத்தும் நாங்கள்
ஏனோ ஆனோம் நிரந்தர அடிமைகள்
ஒவ்வொரு வாடகை வீடுகளிலும் ..

~ அன்புடன் யசோதா காந்த் ~

எனக்குள் ஒரு தேடல்.....



வாழ்கையில் அவசர ஓட்டத்தின் நடுவில்
வாழ்ந்ததையும் தேடலாய்
தேடல் எ
ன்பதா ? ஆசை என்பதா ?
தீராத ஏக்கம் என்பதா ?
கண்கள் மூடி கிடக்கும் நேரம்
பின்னோக்கியே ஓடும் மனம் ..

ஆரம்ப பள்ளியின் ஆசிரியர் முகங்கள்
ஒன்றாய் திரிந்த தோழர்களின் முகங்கள்
உறுதி கொண்டேன்....எனக்குள்
நாளை முதல்
ன்று சேர்க்கவேண்டும்
ஒவ்வொரு வகுப்பிலும் நாங்கள்
எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ...

வாழ்பவர் எத்தனை பேரோ
மறைந்தவர் எத்தனை பேரோ
இல்லை மறந்தவர்தான் எத்தனை பேரோ
முகங்கள் தெரியா பெயர்கள்
பெயர்கள் தெரியா  முகங்கள்
இன்றும் நினைவில்...

தேடுதல் வேட்கை தொடரும்
புகை படங்களையும் ..அவர்களையும்
அந்த இனிய நாட்களையும் ....

~அன்புடன் யசோதா காந்த் ~

கோவில் திருவிழா ....









உள்ளூர் அம்மன்கோவில் திருவிழா
ஊர் மக்களோ ஆர்ப்பாட்டமாய்
பெண்களெல்லாம்  பூச்சூடி பொங்கல் வைக்க
சிறுவர்களோ ராட்டினம் சுற்ற..

இளவட்டங்களும்,முதுவட்டங்களும்
கரகாட்டம் ,ஒயிலாட்டம் வேடிக்கை பார்க்க
வயதான பெண்களோ வில்லுப்பாட்டும் ,,
கதைகளும் கேட்டு இருக்க
கெடா கறி விருந்திற்காய் 
உறவுமுறைகள்  காத்திருக்க

ஒலிபெருக்கியில்
வரி பணத்திற்காய் யாரோ குரல்கொடுக்க
பரபரப்பாய் ,,கோலாகலமாய் கொண்டாட

அமைதியாய் கண்மூடி தழை அசைபோட்டன
பூசாரிக்காய்  காத்திருக்கும்  நேர்ச்சை கெடாக்கள் !

~அன்புடன் யசோதா காந்த்~

ஆயுள் கைதி................

 
 
 
 
 
காளை ஒருவனை கண்டேன்
கண்ட அவனோ  கள்வன்
கோபம் நான்  கொண்டதால்

விழிகள் எனும் சிறைக்குள்
வீழ்த்தி தண்டித்தேன் ...

அவனும் என் தீர்ப்பறிய

நெஞ்செனும் சிறைகூட்டில் விழுந்தான்
என் காதலையே ஆயுள் தண்டனையாய்
நான் தீர்ப்பெழுத
நானும் கள்வனின் காதலி ஆனேன் ...

விரும்பியே நானும்
அவன் மடியில்விழ
அவனோ
தன் பரந்த தோள்களில்

விரிந்த மார்பினில்  அணைத்துகொண்டான்
ஆயுள் கைதியாய் ...
இருவரும் காதல் சிறைக்குள்

இந்த ஜென்மம் தீர்ப்போம் ..

~அன்புடன் யசோதாகாந்த் ~

இரயில் தண்டவாளம்.............




இரவும் பகலும் இருவரும்
மழையிலும் வெயிலிலும்
பனியிலும் குளிரிலும்
புயலிலும் பூகம்பத்திலும்
நூற்றாண்டுகளாய்
நெடுந்தூர பயணம்
ஒருநொடி கூட  விலகாமல்   
இத்தனை இருந்தும்
கை கோர்க்க(சேர்க்க) முடியாமல்
தனி தனியே ...நாங்கள்  
~அன்புடன் யசோதா காந்த்~

போதிமரம் .....






நாட்டிலோ பலவகை மரங்கள்
போதிமரத்திற்கோ புனித கதைகள்
புத்தி வந்து ஆசைகள் களைந்தார் 
புத்த பெருமான்

போதிமரம் தான் காரணம் என்றால்
ஆயிரமாயிரம் புத்தர்கள் எங்கே ??
மரம் ஒன்றும் காரணமில்லை
மனம் ஒன்றே காரணமாய்...

பெண் மண் ஆசை
பொன் பொருள் ஆசை
இவைகள் இல்லா மனிதனும் இல்லை
ஆசைகள் துறக்க போதிமரம் தான்
வேண்டுமென்பதில்லை..

என்றோ ஒருவன் புத்தன் ஆனான்
போதிமரமும் புனிதமாயிற்றே
புத்தனுக்கு ஆசை இல்லை என்று யார் சொன்னது ??
ஆசைகளை துறக்கும் ஆசை இருந்ததால் தானே
புத்தனும் துறவி ஆனான் ..
~ அன்புடன் யசோதா காந்த் ~

வரம் ..........








இறைவன் வருவான்
வரமென்ன வேண்டும் என்பான் ??
பிறவிகள் இரண்டில் ஒன்று
கேட்பேன் வரமாய்...

தாயுள்ளம் கொண்டவன் அவன்
தயக்கமின்றி தந்திடுவான்...

முதல் வரமாய் ......
கடவுளாய் நான்
மற்றொன்றோ ...............
குழந்தையாய் நான்

உலகின் உயிர்களை நினைத்து
அவைகளுக்கு அனைத்தையும் ஈந்து
ஆனந்தத்தில் ஆழ்த்திடுவேன்
கடவுள் நானென்றால்...

உலகையே மறந்து
கவலைகள் துறந்து
குதுகலிப்பேன் கொண்டாட்டமாய்
ஒன்றுமறியா குழந்தை நானென்றால்
~ அன்புடன் யசோதா காந்த் ~

கருணை இல்லா கற்புக்கரசி...




பத்தினி பெண் நீ என்பதால்
உன்னை தலை வணங்குகிறேன்
மதுரையை நீ எரித்ததால்
உன்மேல் எரிச்சல் அடைகிறேன்...
ஈ எறும்பினை கொல்வதே பாவம் அன்றோ
நீயோ  எத்தனையோ உயிர்களை
இரக்கமின்றி கொன்றாயே
உன் கணவன் ஒன்றும் உத்தமன் இல்லையே
உன்னை விட்டு
மாதவி காலடியில் கிடந்தவன் ஆயிற்றே
ஒரு வேளை
உத்தமனாய் அவன் இருந்திருந்தால்
உலகத்தையே அழித்திருப்பாயோ ???

பெண் என்றால் பேயும் இரங்குமே
இதயமே இல்லாதவளா பெண்ணே நீ ??
புத்தகங்கள் வேண்டுமானால் உனை புகழட்டும்
எனக்கு உன் மேல் என்றென்றும் கோபமே !
~ அன்புடன் யசோதா காந்த் ~

மனம்......




காலைக்கதிரவன்
கண்சிவந்து நிற்க
காரணம் நான் கேட்க
ஏதேதோ அவன் சொல்ல
நேரமும் நகர்ந்தது மெல்ல ..
சுள்ளென்று அவன் சுட்டெரிக்க
சட்டென்று என் மனமும் எரிச்சல் கொள்ள
குளிர்தரும் மழையே நன்று
நீயோ கொடியவன் என்றேன் ..அவனிடம்
புரிந்து கொள்வாய் நீயென எள்ளி நகையாடினான் ..

சிறிது நாட்கள் சென்றதும்
நான் விரும்பிய குளிர்காலம் வந்தது
சில தினங்கள் அனுபவித்தேன் ஆவலாய்
வீட்டின் உள்ளும் புறமும் இதமான குளிர்
இடைவெளி இல்லா அடைமழையும்

நாட்கள் செல்ல செல்ல
அலுத்தது  அதுவும் எனக்கு
மழையினால் வேலைகள் கூட முடங்கி போனது
பகலில் கூட இரவின் சாயல்
மெல்ல தேடியது மனம் உச்சிவெயில் வேண்டுமென்று ..
அடை மழை கூடித்தான் போனது ...
எனக்கு மட்டுமல்ல
என் வீட்டு மிருக  ஜீவன்களுக்கும்
மழை பிடிக்காமல் போனது ..

கண்கள் கிழக்கில்
கதிரவன் வரவை காண
இறைவனை
வேண்டி நின்றது மனம்
வெயிலில் மழையையும்
மழையில் வெயிலையும்
தேடும் மனதை என்னவென்பது ??

~ அன்புடன் யசோதா காந்த் ~

அணைப்பு ...

தாயின் ஆசை யான முதல் அணைப்பு 
தந்தையின் பாசம் நிறைந்த அணைப்பு 
ஆசான் தரும் அறிவின் அணைப்பு 
தெய்வம் தரும் பக்தி அணைப்பு
நண்பன் தரும் ஆறுதல் அணைப்பு
சொந்தங்கள் தரும் அன்பின் அணைப்பு
மேலதிகாரிகளின் கனிவான அணைப்பு
சமுதாயத்தின் பண்பான அணைப்பு
காதலால் வரும் இன்ப அணைப்பு
வயோதிகத்தில் வரும் மரண அணைப்பு
மனிதனின் தொடக்கம் தொடங்கி
முடிவுவரை தொடரும் அரவணைப்புகள்

~ அன்புடன் யசோதா காந்த் ~ 

முத்தம் ...........



நான் கொடுத்த முத்தங்கள் எத்தனை
எண்ணிக்கை எனக்கு மறந்து போனது
நீ எண்ணிய என் முத்தங்கள் இனித்ததா ??
எல்லாமே எனக்கு தித்திப்பாய் ..
ஒன்றுக்கொன்று
விஞ்சியும் மிஞ்சியும் ...
கெஞ்சியது என் மனம்
கொஞ்சி மகிழ பூ முத்தங்கள்
இன்னும் வேண்டுமென்று ..

முத்தபோட்டியில்
ஜெயிப்பது நீயா நானா ??
ஜெயிப்பவர்களுக்கு முத்தமே பரிசாய்
இடைவெளி விட்டும் விடாமலும்
இன்ப முத்தங்கள் ..
 

உன்முத்தத்தினை மஞ்சளாய் பூசி
முத்தமழையில் குளிக்கின்றேன்
உன் முத்தத்தால் தானே
என் தாகம் தீர்க்கின்றேன் ..
முத்தத்தால் எனை மூர்ச்சையாக்கி
என் மூச்சை நிறுத்திவிடு ..
~ அன்புடன் யசோதா காந்த் ~

கடிதம் ...



( வலையும் தொலைபேசியும் வேண்டாமே   )

சொல்ல வந்த கதைகளை
சொல்லி முடித்தேன் கடிதத்தில்
மெல்லமாய் எச்சில் தொட்டு
செல்லமாய் ஒட்டினேன்  தபால் தலையை
என் எச்சில் நனைத்து ஒட்டிய கடிதத்தை
நீரும் எச்சில் துணையோடு தான் பிரிப்பீரோ  ??
நேரில் பகரும் முத்தத்தை  இருவரும்
கடிதத்தில் பரிமாறிக்கொண்டோமோ ?..

தபால் காரன் வரும் வழி பார்த்து
தவம் கிடக்கிறதே கண்கள் இரண்டும்
பதில் கடிதம் வரும்வரைக்கும்
வேலைகள் எல்லாம் வீணாக  கிடக்கிறதே
கடிதம் கண்ணில் கண்ட பின் தான்
மனமும் சொல் பேச்சு கேட்கிறதே  ...

கடிதம் சொல்லும் வரிகள் எல்லாம்
என் காதில் உமது குரலாய் ஒலிக்கிறதே ..
கொஞ்சலும் மிஞ்சலும் தொடர்கிறதே
வஞ்சி நான் உம்பதிலை வாசித்தபின்பும் ..
இரவெல்லாம் உறக்கம் வரும் வரைக்கும்
கடிதத்துடன் அல்லவா கதை சொல்கிறேன் ...
கடிதமும் என் கதை கேட்பதை கண்டு
கண் அயர்ந்து  உறங்கி போகிறேன் ..
விடியும் நாளை புது பொழுதில்
விவரங்களை சொல்ல
விரிவாய் மற்றொரு  கடிதம் எழுத
மனதில் எண்ண அலைகள்
எழுர்ச்சி கொண்டு அடிக்கிறதே ..
தொடரும் இந்த தபால் உறவுகள்
துடிப்புடன் நன்றாய் தொடரட்டுமே ..

~ அன்புடன்  யசோதா காந்த் ~

பாவம் இறைவன் ...




விவசாயி   வீட்டிலோ 
இறைவனுக்கு படையலிட்டும் 
நேர்ச்சைகள் பல நேர்ந்தும்
வேண்டினான் மழை பொழிய .....

வழியோரத்திலோ
நாளிதழ்களை படுக்கையாக்கி
கிழிந்த கோணிப்பைகளை
போர்வையாக்கி
உறங்க காத்திருக்கும் ஏழையோ
இறைவனை வேண்டினான்
மழை  பெய்யக்கூடாதென்று....

இறைவனுக்கும் குழப்பம்
.
~ அன்புடன் யசோதா ~

வங்கி ...





வங்கியில் பணமெடுத்து
வரும் வழியில்
எதேச்சையாய்
ஒவ்வொரு பணத்தினையும்
முகர்ந்து பார்த்தேன் ..
ஒன்றிலுமே வாசனை இல்லை ..

வங்கியின் வாசல் காணாத
அன்னை தரும் பணத்தில்
வாசம் மட்டும் வசமாக குடி இருந்தது ..

மல்லி ஜீரக  கடுகு டப்பாக்கள் தான்
அன்னை பணத்திற்கு  வங்கியாய் இருந்தது
அவள் கைகளில் புழங்கிய பணத்திற்கும்
வாசனையை  விதவிதமான வாரி தந்தது ..

இன்று என் கைகளிலோ
வாசனை இல்லா
சலவைத்தாள்களாக பணம் ..
~ அன்புடன் யசோதா காந்த் ~

உலகமே நீயாய் ..



      

என்னுள் தோன்றும் எண்ணமாய்
அதை எழுதும் எழுத்தாய்

வார்த்தைகளின் வடிவமாய்
நான் படிக்கும் வேதமாய்

உன் குரல் காதில் ஒலியாய்
கண்களில் உன் முகம் ஒளியாய்

உனை பிரிந்த நேரம் முள்ளாய்
சேர்ந்த நேரமோ சொர்க்கமாய்

நடக்கையில் என் நிழலாய்
நெஞ்சினுள் எப்போதும் நினைவாய்

உன் அணுக்களால் உருவான உருவமாய்
அன்பே நீ என் ஆன்மாவாய்

ஒரே உடலுமாய் ............
ஒரே உயிருமாய் .............
உலகமே எனக்கு நீயாய் ..
~ அன்புடன் யசோதா காந்த் ~