பார்வை....



உன் பார்வையின் அர்த்த்தங்களை
என்னவென்று சொல்வேன் .....
அழகான ஆழமான பார்வை
ஆயிரம் கதைகள் சொல்லும் அற்புத பார்வை
அன்பை அள்ளித்தரும் அமைதியின்பார்வை
பசியை மறக்க செய்யும்தாய்மையின் பார்வை
பிணி கூட பறந்தோடும்ஆரோக்கியத்தின் பார்வை
பெரியோர்களை பாசத்தால் அணை போடும் கருணையின்  பார்வை
மழலைகளும்  மகிழும்  உன்  அள்ளி அணைக்கும்  பார்வை
பகைவனையும் நண்பனாக்கும் நட்பின்பார்வை
எதிரிக்கும் பயம் தரும் வீரத்தின்  பார்வை
எனக்கு மட்டும் காந்தமானகாதல் பார்வை....
உந்தன் பார்வை !..

~ அன்புடன் யசோதா காந்த் ~

அறியாமை ...



அடிக்கடி சிரித்து பேசியது
தான் விளையாடும் பொம்மையுடன்
அந்த அழகான குழந்தை ...
 
முந்தானை தலைப்பால்
முகத்தை மூடி அழும் அன்னையிடம்
வெளியில் போகலாம் என்று
கைப்பிடித்து இழுத்தது...

வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும்
உறவினர்களை கண்டு
துள்ளல் நடையோடு
கொண்டாட்டமாய் குதூகளித்தது..

விபத்தில் உயிரிழந்த
தந்தையின் உடலை
நடுக்கூடத்தில்
கிடத்தி இருப்பதை அறியாத
கவலை தெரியாத
சின்னஞ்சிறு மழலை ....
 
~ அன்புடன் யசோதா காந்த் ~

இளைய பாரதம்




வானம் ஒன்றும் தூரமில்லை
எங்கள் நெஞ்சில் சோகமில்லை
சிறு புல்லும் நாங்கள் தொட்டால்
கொடும் பெரும் ஆயுதமாகும்..

நாளை உலகம் எங்கள் மூலம்
நல்ல காலம் காண செய்வோம்
புரட்சி செய்வோம் எங்கு எதிலும்
எதிர்த்து நிற்போம் குற்றங்களை

தாய் நாட்டைக்காப்போம்
தைரியம் கொண்டு
தீவிரவாதம் ஒழிப்போம்
இது தாய் மீது ஆணை...

இந்தியன் அனைவரும் உடன்பிறப்பென்று
உறக்கத்தில் கூட உணர்ந்து இருப்போம்
புதுமை செய்யும் இளைஞர்கள் நாங்கள்
புதிய இந்தியா எங்கள் கைகளில்...
 
வந்தே மாதரம் !
~ அன்புடன் யசோதா காந்த் ~


தெய்வத்தாய்...



ஆசையாய்  பெற்றெடுத்தாள்
அழகிய குழந்தை ஒன்று
கொஞ்சி மகிழ்ந்தினர் குடும்பத்தினர்
குழந்தையின் வளர்ச்சியிலோ
மாற்றங்கள் ஒன்றுமில்லை

நாட்கள் நகர நகர  மெல்ல புரிந்தது
மனவளர்ச்சி இல்லா குழந்தை என்று
மருத்துவர் கூறினார்
மற்றுமொரு யோசனை
நிறைவாய் மற்றொன்று
ஆரோக்கியத்துடன்  பெறலாமே  என்று

தீர்க்கமாய் மறுத்தாள்
பிள்ளையை அணைத்துக்கொண்டு
இன்னுமொன்று பெற்றால்
இதை கவனிக்க தவறுவோமோ  என்று…

இன்பமோ துன்பமோ
இக்குழந்தையே போதுமென்று
இறைவனிடம் மன்றாடினாள்  
என்
பிள்ளைக்கு அறிவையும்
நீண்ட
ஆயுளையும் கொடுப்பாயா என்று !


என் கண்களில்
அவள் தாய் அல்ல ..
தெய்வத்தின் உருவமாய்
அவளே தெய்வத்தாயாய் …
                                                   ~  அன்புடன் யசோதா காந்த் ~

நிலவு பெண்ணே .....





இவள் ஒரு ஏமாற்றுகாரி 
நான் காதலிக்கிறேன் என்று தெரிந்தும் 
என்னிடம் கண்ஜாடை காட்டி நிற்கிறாள் 
பகலெல்லாம் முக்காடு இட்டு கொண்டு 
இரவானால் மட்டும் முகம் காட்டுவாள் 
ஒரு திங்கள்கொருமுறை
சிணுங்கி மருகி தேய்கிறாள் 
பின் மெல்லமாய் வளர்ந்து 
ஒளிவீசி மிளிர்கிறாள் ..
என்னை ராப்பாடியாய் 
ராகம் பாடவைத்து 
மேகதிரையில் மறைந்து 
கண்ணாம் பூச்சி ஆட்டம் ஆடுகிறாள் 
நான் மோகமாய் பார்ப்பதை கண்டு 
மௌனமாய் சிரிக்கிறாள் ...
என்று தான் நானும்
நிலவு பெண்ணே ..உன்னோடு 
பொன் நிலாகாலத்தில் 
உலா வருவேனோ ..
~ அன்புடன் யசோதாகாந்த் ~

விடியாத கனவு .......


கண் மூடி கிடந்தேன் 
கண்டேன் ஒரு புது உலகம் 
ஜொலிக்கும் ஒரு பெரும் நகரம் 
அங்கே ஜாதி இல்லை 
ஏற்ற தாழ்வு இல்லை 
ஆட்டி படைக்கும் அதிகார வர்க்கம் இல்லை 
அங்கே எல்லோரும் மன்னர்கள் 
மதிப்புமிக்க மனிதர்களாக 
போட்டி பொறாமை இல்லை ...
அனைவருக்கும் ஒரே உணவு 
ஒரே ஆடை  ஒரே ஊதியம் 
பெண்களெல்லாம் தேவதைகளாக 
குழந்தைகளோ தேவகுமரர்களாக 
ஊரெங்கும் தோரணம் 
காணுமிடமெல்லாம் விழாக்கோலம் 
வானத்திற்கும் பூமிக்கும் 
வாசல்படியும் அழகிய ஏணிபடியும்
கண்திறக்க மனமில்லை..
கனவிலாவது இவ்வதிசயங்கள் 
தொடரட்டும் என்று .......
~ அன்புடன் யசோதாகாந்த் ~

என்னுயிர் காதலியே .......



சுடும் பார்வையால் என்னை சுட்டவளே
கடும் சொல்லால் கலங்க செய்தவளே
நெடும் தூரம் என்னை ஓடவைத்து
தடுமாறி தடம் புரள வைத்தாயே
பெரும் குற்றம் என்ன என்னிடத்தில் ?
காதலிப்பது குற்றம் என்றால்
இவ்வுலகில் காதலே குற்றமடி ..
உன் பார்வை தணியாதோ
உன் பூவிதழ் திறந்து காதலை சொல்வாயோ
மெல்ல மெல்ல உறிஞ்சும் என் உயிரை
ஒரேயடியாய் பறித்து விடு என் செல்லமே ..
உன் கையால் சாவென்பதும்
மகிழ்ச்சியடி எனக்கு ......

அன்புடன் யசோதா காந்த்

விவசாயம்







நம் பாரதநாட்டின்
முதுகெலும்பாம் விவசாயி
இன்று அவனுக்கும் வேலையில்லா  திண்டாட்டம்..
விவசாயிகள் அதிகமானதால் அல்ல ..
விவசாயம் இல்லாமல் போனதால்
செழிப்பாய் இருந்த கிராமங்களும்
இன்று நகரமாய் மாறும் முயற்சியில்
காடுகள் வெட்டி சமமாக்கி
வயல்வெளிகளை தரிசாக்கி
தரிசாக்கிய நிலங்களை காசாக்கி
விவசாயத்தை அழிக்க துடிக்கும் மக்கள்
ஆதரவாய் அரசாங்கமும் ..
இன்றோ காடு கரைகளும் வயல்வெளிகளும்
அடுக்கமாடிகளாய் கடைவீதிகளாய்..
துரிதமாய் சாகும் விவசாயம்
துடிதுடித்து குழியில் விழும் விவசாயியும்
இன்றே சேமித்து வைத்து விட்டேன்
எனது கணனியில் ..
வயல்வெளிகளையும் பயிர்வகைகளையும்
புகைப்படங்களாய்
அரிசி செடி எதுவென கேட்கும்
எதிர்கால என் தலைமுறைகளுக்காய்


~ அன்புடன் யசோதா காந்த் ~

எல்லாம் அழகே .........





மலைகளில் தெரியும் மந்தாரம்
சிலைகளில் தெரியும் மௌனம்

பேசும்போது விழும் வார்த்தைகள்
பேசாத போது விழுங்கும் உணர்ச்சிகள்

வளர்ந்து ஒளி வீசும் பிறை அழகு
தேய்ந்து மறைந்த நிலவழகு

பல் முளைக்கா மழலை சிரிப்பு
பல் போன முதுமை நகைப்பு

விழிகளில் காணும் காட்சிகள்
மொழிகளில் காணும் இனிமைகள்


வானுயர்ந்த நீண்ட மரங்கள்
குறுகிய புல் பூண்டுகள்

குளிர் நடுங்கும் பனி காலம்
கோடை தரும் கொதிப்பு

ஆறறிவு மனிதனும்
ஐந்தறிவு ஜீவன்களும்

இறைவன் படைப்பில் ...காணும்
எல்லாம் அழகே ...
~ அன்புடன் உங்கள் யசோதா காந்த் ~

ஈகோ

விட்டு கொடுக்கும் எண்ணம் 
 எள்ளளவும் இல்லையே என்னிடம்
பிடிவாதம் ஒன்றே...தொடரும் 
தொடர்கதையாய் ..
பேசி தீர்க்கும் விஷயத்திற்கெல்லாம் 
பேசாமல் இருந்து பெரிதாக்கி ..
நான் தொலைத்த உறவுகள் 
மீண்டும் கிடைக்குமோ ?
கொஞ்சி மகிழ்ந்த ,
ஆறாம் வகுப்புதோழி 
எனக்காய் அழுத .
எட்டாம் வகுப்பு கமலா 
எதையும் எனகாய்  செய்யும் 
கல்லூரி நட்பு மீனா 
இன்னும் எத்தனை எத்தனை 
நடப்புக்களை நான் இழந்தேன் 


பாழாய் போன ஈகோ வந்திராவிட்டால் ....
இன்று இருப்பார்ள் என் அருகே
என் உயிர் தோழிகள்  ..


பாழும் ஈகோ நட்பிடம் கூட
விலை பேசி நிற்கிறதே ...
இன்றுவரை எனக்குள் ........
~ அன்புடன் யசோதா காந்த்~