காதலான காதலன் ..









காதலில் உயிரானவன்  
உலகிற்கு உயர்வானவன்
சுற்றி இருப்போர்க்கு உறவானவன்
தித்திக்கும் தேனாய் இனிப்பவன்
ஊருக்கு உதவுபவன்
என்னில் நிழலானவன்
தன்னில் பாதி எனக்கு தந்தவன்
நீதி நெறி தெரிந்தவன்
என் நெஞ்சம் நிறைந்தவன்
தஞ்சம் என வந்தோர்க்கு தயை செய்பவன்
அநீதிக்கு குரல் கொடுப்பவன்
அழகில் ஆணழகன்
உன்னை நான் அடைய
என்ன வரம் பெற்றேனோ

   ~ அன்புடன் யசோதா  காந்த் ~  

தமிழன் ....






உலகெங்கும் கொடிகட்டி பறப்பவன் தமிழன்
ஊர் எல்லையில் ஆதரவின்றி கிடப்பவனும் தமிழன்

தீமையை  கண்டு குரல் கொடுப்பவன் தமிழன்
கொடுமைகள் கண்டும் கண் மூடிகொள்பவனும் தமிழன்

தலை நிமிர்ந்து நடை போடுபவன் தமிழன்
குட்ட குட்ட குனிந்து தளர்பவனும்  தமிழன்

புதுமைகள் பல படைப்பவன் தமிழன்
பழமையில் ஊறி திளைப்பவனும் தமிழன்

பாகுபாடின்றி சமபந்தி உண்பவன்  தமிழன்
ஜாதி வெறியில் இரத்தம் சிந்துபவனும் தமிழன்

அன்பென்ற சொல்லுக்கு அர்த்தம் தமிழன்
இரக்கமற்ற சிலசெயல்கள் புரிபவனும் தமிழன்


எங்கும் தமிழ் எதிலும் தமிழென குரல் கொடுப்பவன் தமிழன் 
தமிழ் மறந்து பிறமொழியில் பேரம் பேசுபவனும் தமிழன்

தமிழனென்று  சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா

தமிழனுக்கென்று தனிக்குணம் உண்டென்று அறிந்து
நல் தமிழனாய் வாழ்வோம் ...
~ அன்புடன் யசோதா காந்த் ~ 

வெளிச்சம் ...






தெருவோர குருட்டு பெண்ணிடம்
முறைகேடாய் நயவஞ்சகன் ..
தறிகெட்ட அச்செயலால்
நிறைகுடமாய் முன் வயிறு ..
இருந்தும் அவளுக்குள் ஆனந்தம்
இனி கை பிடித்து தன்னை
நடத்தி செல்ல
உலகின் வெளிச்சம் தனக்கு தந்திட
தொப்புள் கொடி உறவு வருமென்று
மகப்பேருக்காய் காத்திருந்தாள்
மங்கை  அவள் ..
கறுப்பு வெள்ளை கனவுகளோடு
~அன்புடன் யசோதா காந்த் ~

ஆசைக்கு அழிவில்லை ...









ஆசைக்கு அழிவில்லை ...
ஆசைகளும் அடங்குவதில்லை

ஆசைகள் வேண்டும் நம் மனதிலே
அவை வாழ்கையை உயர்த்தும் உயர்வுகளிலே

ஆசைகள் வளர்ப்போம் இயன்றவரை
அது  ஈடேறும் நாள் வரும்வரையே

ஏணி படிகள் இன்றி ஏற்றங்கள் தொடலாம்
தயக்கமின்றி  தடைகளும்  தாண்டலாம்

ஆசை ஒன்றே ஆக்கத்திற்கு காரணம்
ஆசையில்லா மனிதனும் அரை  மனிதனே
~`அன்புடன் யசோதா காந்த் ~

விழிகளே ....






எனது விழிகளே ....
பலமுறை வேண்டியும்
பயனில்லை உங்களிடம்
மனதின் மர்மங்களை
அம்பலபடுத்தும் ஆயுதங்களே
அடிமைபோல் கேட்கிறேன்
உணர்ச்சிகளை மறைத்து கொள்ளுங்களேன்


காதல் தோல்வியால் துவண்டதையும்
கவலைகள் என்னை கலக்கியதையும்
பயம் எனும் பேய் பாடாய் படுத்தியதையும்
  பிரிவுகள் பல வந்து பித்தாய் அலைந்ததையும் 

யாரும் அறியாது உள்ளுக்குள் உருகுவதையும்
விழிகள் நீங்கள்  அறிவிப்பதேனோ ?
 
வலிகள் பலவகை  வருவினும்
விழிநீர் வடிக்காதீர்கள்

விசும்பலுடன் விண்ணபிக்கிறேன்
எனது விழிகளே ...

~அன்புடன் யசோதா காந்த் ~

திருமண நாள் ...









இன்று ஏனோ
புதிதாய் கவிதைகள்
ஒன்றும் வரைய வில்லை
என் திருமண நாள் என்பதாலோ
மனம் பின்னோக்கி பறந்தது
என் வாலிப வயதும்
என் கணவரை காதலித்ததும்
காதலில் நாங்கள் மகிழ்ந்ததும்
பெற்றோரை எதிர்த்து
திருமணம் செய்ய துணிந்ததும்
என்னவரின் உறவினர்கள்
கலந்து ஆலோசித்தபின்
ஊரறிய திருமணம் ஆனதும்
எல்லாம் நேற்று நடந்தது போல்
ஓடிவிட்டது ..
முத்தான பதினேழு வருடங்கள்
அழகாய் இரண்டு குழந்தை செல்வங்களும்
நன்றி இறைவா
நாளும் நான் மறவேன்
வணங்குகிறேன்
வாழ்த்துங்கள் ...

~அன்புடன் யசோதா காந்த் ~

பிரியாத வரம் ...









இணைந்து நாம்  வாழ்ந்ததோ
முத்தான முப்பது வருடங்கள்


எனக்கு அவரும்
அவருக்கு நானும்  அன்பாய்


எல்லநேரங்களிலும் ஆதரவாய்
இணைபிரியா  நாட்கள்


மனைவி சொல்  கேட்டோ மகனோ
பிரித்துவிட்டான்
வெவ்வேறு முதியோர் இல்லங்களில்
இனி என்று சேர்வோமோ   ?


ஏக்கத்துடன் என் மனம்
 மரணத்தை நோக்கி ..


~`அன்புடன் யசோதா காந்த் ~

என் உயிர் நண்பனே ...





நண்பனே உன்னை வணங்குகிறேன்
நாளும் நீ வாழ வாழ்த்திடுவேன் 

அந்நிய அரபு தேசத்திலே
அடிமை வாழ்வினிடையே
அறிமுகமானேன் உன்னுடனே ...


அறியா மொழி பேசுவோர் நடுவினிலே
தாய் மொழியாம்
தமிழ் மொழி நம்மை சேர்த்ததே

என்ன தவம் நான் செய்தேனோ
உன்னை தோழனாய்  அடைந்ததிலே
உன் அருகாமை  என்னில் கிடைத்ததிலே
உலகே என் கைகளில் என உணர்ந்தேனே

என் இன்ப  துன்ப வேளையினிலே
நீ என் தெய்வம் என்றுணர்ந்தேனே
என்று தீர்ப்பேனோ இக்கடனை
நட்புக்கோர் இலக்கணமானாயே



வாயால் சொல்லி தீராதே
நீ செய்த நன்மைகளே
காவியம் படைக்க முயல்கின்றேன்
கருணை கொண்ட உன் மனதை


எதிரிகள் ஆயிரம் வந்திடினும் 
உன் துணையால்  வென்றிடுவேனே 
வாழிய வாழிய வாழியவே
என் உயிர் நண்பன் என்றென்றும் நீ
வாழியவே

~`அன்புடன் யசோதா காந்த் ~

என் துணைவி ...












யாராய் இருந்தாள் அவள் எனக்கு
அன்பு மிகு அன்னையாய்
அறிவு சொல்லும் ஆசிரியையாய்
பணிவிடைகள் செய்யும் செவிலியாய்
எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் தோழியாய்

சில நேரங்களில் சண்டைக்காரியாய்
பல நேரங்களில் குழந்தையாய்
மணமுடித்த நாள் முதல்
மகிழ்ச்சிக்கு குறைவே இல்லையே

யார் கண் பட்டதோ
மாயமாய் மறைந்து விட்டாளே
சுமங்கலியாய் போய் சேர வேண்டும் என்பாள்
அடிக்கடி சொல்லும் வாரத்தை அது
அரங்கேறி போனதே
எமனும் அவள் சொல் கேட்டதேன் ?
ஒரு நொடியும் பிரியாத நான்
எப்படி அவளின்றி நிரந்தரமாய் ?

என் தோல்வி நேரங்களில்
வெற்றிப்பாதை காட்டியவளே
இனி யார் என் மனம் தெரிந்து நடப்பார் ???
யார் என் காது மடல் வருடி கொடுத்து தூங்க செய்வார் ?? ..
யாரிடம் என் வரவு செலவு சொல்வேன் ??..
கண்ணை காட்டில் விட்டாளே
அழகே உன் பூமுகம் எங்கே ??
சகியே உன் புன்னகை எங்கே ??

ஓ காலனே வா வா வா ..
என்னையும் அழைத்து போ போ போ ..




~அன்புடன் யசோதா காந்த் ~

பனி துளி ..




யார் பிரிவை நீ நினைத்து
இரவெல்லாம் அழுது  தீர்த்தாயோ 
விடிந்த  பின்னும்
நீ வடித்த கண்ணீர் துளிகள்
புற்கள்  மீதும் செடி கொடி மரங்கள் மீதும்
நீல ஆடை கட்டும் வானமே .. 


~ அன்புடன் யசோதா காந்த் ~

நிலையாய் ..








இரவோ பகலோ
எப்பொழுதும் பரபரப்பாய்

வருவோரும் போவோரும்
பல்லாயிர கணக்காய்


வரவேற்ப்போரும் வழியனுப்புவோரும்
வந்து வந்து செல்வார்
 
சிரிப்பொலிகளும் அழும் சத்தங்களும்
அடிக்கடி கேட்கும்


பேரம் பேசுவோரும்  பாரம் சுமப்போரும்
கடமைகளில்  கருத்தாய்

நாங்கள் மட்டும் நிலையாய்
வாழ்த்தி கொண்டும் வணங்கி கொண்டும்

(ரயில் நிலையங்களும் ..பஸ் நிலையங்களும் )

~ அன்புடன் யசோதா காந்த் ~

கவிதை ...




மனதில் கர்ப்பம் தரித்து
எழுதுகோல் கொண்டு பிரசவித்து
நல்லதோர் விமர்சனத்திர்க்காக
மக்களின் கரம்பிடிக்க துடிக்கும்
பாவம் ஒரு சிறு குழந்தை ....

~அன்புடன் யசோதா காந்த் ~

விளக்கேற்றுவோம் ...






அறியாமை எனும் இருளை
                   கல்வி என்ற விளக்கால் விரட்டுவோம்

பகைமை எனும் தீயை
               நட்பு எனும் நீரால் அணைப்போம்

ஒற்றுமை எனும் கொள்கையை
           அன்பு எனும்விலங்கால்  பூட்டுவோம் 

இறை எனும் ஆன்மீகத்தை 

          பக்தி எனும் மார்க்கத்தால்  நாடுவோம்

 வறுமை எனும் பேயை
          அயரா உழைப்பால் ஒழிப்போம் 

~அன்புடன் யசோதா காந்த் ~

இனியொரு ஜென்மம்...




இனியொரு ஜென்மம் வேண்டும்
இரவலாய் இறைவனிடம் கேட்பேன்

பேசி தீராத கதைகள் பேச
மீண்டும் ஒரு ஜென்மம் நமக்கு

நீயும் நானும் வாழ
மாய தீவு ஒன்றும்


பூந்தோட்டம் ஓன்றும்
உன்னைப்போல் அழகான பூக்களும்

நம் காதலுக்கு காவலாய்
இயற்கை அன்னையும்

நம் காதலில் கை கொடுக்கும்
நல்ல நண்பர்கள் கூட்டமும்

அன்பே உன் தோழியராய்
தேவலோக மங்கைகளும்

இனிதாய் நம்முடன்
இழந்த சில சொந்தங்களும்

கேட்டதை தந்திடும் 
அற்புத விளக்கொன்றும் 

இன்பமாய் அன்பே
இன்புற நானும் நீயும்

புத்தம்புது ஜென்மத்தில்

~ யசோதா காந்த் ~

விரைவில் வந்துவிடு ...




சாணம் தெளித்து கோலமிடும் முற்றம்
பூஜைக்காய் தினம் பறிக்கும் செம்பருத்தி


முற்றத்து முல்லை பூக்கள்
நீ பரிமாறி முதல் உணவு உண்ணும் காக்கை


ஓடி பிடித்து மாலையில் நீ அடைக்கும் கோழி குஞ்சுகள்
ஈர கூந்தலில் நீ சுற்றும் துளசி மாடம்


ஓயாமல் அமர்ந்தாடும் மர ஊஞ்சல்
நம் வீட்டு மாமரத்தில் வந்தமரும் கிளி கூட்டம்

உன் கதைகள் தினம் கேட்கும் சமையலறை
உன் கைகளோடு கைகலப்பு செய்யும் பாத்திரபண்டங்கள்

இவைகளும் என் போல் தவிக்கின்றன
மகபேறுக்காய் உன் தாய் வீடு நீ சென்றதை அறியாமல்

~அன்புடன் யசோதா காந்த் ~

வாழ்க்கை ....





தேனினும்
இனிமை உண்டோ ?
வேம்பின்  சுவையும்
விரும்புவார் உண்டோ ?

இறைவன் தந்த வாழ்வினிலே
இனியவை  மட்டும் அனுபவித்து
துன்பம்  தவிர்க்க முடியுமோ?

இன்பத்தில் இன்புறும் மானிடன்
துயரத்தால் துவளுவதேனோ ?

உலகின் உயிர்கள் எல்லாம்
ஒரே நிலை அடைய முடியுமோ?
பஞ்சு மெத்தையில் ஒருவனும்
வீதியோர மண்படுக்கையில்
மற்றொருவனும்  ஏனோ? 

முரண்பாடான கேள்விகளுடன் ...
முறையான பதிலை தேடி ...(?)


~அன்புடன் யசோதா காந்த் ~

பொய் ...




பொய் சொன்னதால்
இறந்ததே  என் மனம்
உயிர் அற்ற ஜடமாகி
உடலிலே ஊனமாகி
பேச்சின்றி ஊமையாகி
நானோ பாவியாகிபோனேனே ! 

அறியேன் இதற்குமுன்
இதுபோல் ஒருநிலை

கொலைக்குற்றம்  சிறிதாகி
என் பொய் குற்றம்
பெரிதானதே...

இல்லாத  ஒன்றை
இருப்பதாய் சொல்லி
சுயம் ஒன்றே
சிந்தனையாய்
யார் என்னை மன்னிப்பாரோ

தெய்வம் கூட பொறுக்குமா
பாவி நான் செய்த பாதகத்தை ..

~அன்புடன் யசோதா காந்த்~



மரணம் ,,,




நானும் பலசாலியே
   எனை கொல்ல
அணுகுண்டோ  கத்திகளோ
தூக்கு கயிறோ  விஷமருந்துகளோ
தேவை இல்லையே ...

நீ என்னுடன் பேசாதிருக்கும்
இந்த  இந்த நொடிகள்..
என்னை  சாவின் எல்லைவரை
கொண்டு செல்கிறதே
நான் வாழ்வதும் வீழ்வதும் உன்னாலே ! 


~அன்புடன் யசோதா காந்த் ~

தருணம் ....






வாடிய மலரில் 
நீர் ஊற்றும் தருணம்

அழுத குழந்தைக்கு 
பால் குடிக்கும்  தருணம்
சுடும் வெயிலில் நடந்தவரை
குளிர் அறையில் இருத்திய தருணம்

நாவறண்டு தவித்தபோது
ஒரு வாய் தண்ணீர் கிடைத்த  தருணம்

பருந்து தூக்கி சென்ற குஞ்சை 
தாய் கோழி பெற்ற தருணம்

மாரடைப்பால் மூர்ச்சையாகி
அவசர சிகிச்சையால் உயிர் பெற்ற தருணம்

இந்த தருணங்களை போலல்லவா
அன்பே  என்னை பிரிந்த நீ 
கூடிய தருணம் .

~அன்புடன் உங்கள் யசோதா காந்த் ~

எல்லாமாய் அவனே ...




அன்பே வலிகள் என்பது
என் உடலில் இல்லையே

கோபமோ எரிச்சலோ
என்னில் நிலைப்பதில்லையே

துக்கமும் சஞ்சலமும்
என்னை நெருங்குவதில்லையே 

உலகே அழியும் என்றாலும்
எனக்குள் கலக்கம் இல்லையே

தனிமையாய் நான் தனித்து போனாலும்
என்னிடம் தவிப்பு இல்லையே

யார் என்னை வெறுத்தாலும்
நான்  வெட்கி போவதில்லையே

இவைஎல்லாம் நீ என்னுள்
எல்லாமாய் இருப்பதாலோ
என்றென்றும் நான் இன்பத்திலே

~அன்புடன் யசோத காந்த் ~

உயிர் துளிகள் ...



உழைப்பில்
பயத்தில்
பிணியில்
துணையாய் வேர்வை துளிகள் அன்றோ !

பஞ்சத்தில்
விவசாயத்தில்
உயிர்வாழ்வில்
வரபிரசாதமாய் மழை துளிகள் அன்றோ !

துயரத்தில்
ஆனந்தத்தில்
பிரிவில்
ஆறுதலாய் கண்ணீர் துளிகள் அன்றோ !

ஜனனத்தில்
விபத்தில்
உயிர்கொடுக்க
ஆதரவாய் இரத்த துளிகள் அன்றோ!




~அன்புடன் யசோதா காந்த் ~