பொக்கிஷம் ...

..







எழுதுவதும் வாசிப்பதும்
கிழித்து எறிவதும் தொடர்கதையாய்
மனதின் தேடல் கிடைப்பதுவரை
காகித துண்டுகள் மலைபோல் குவியலாய்

மனைவிக்கு கோபம்
வீட்டை சுத்தம் செய்தே
ஓய்ந்து விடவே

குழந்தைகளும் எச்சரித்தன எனை
குப்பைபோடாதீர்கள் என

என் ஊனமுற்ற கவிதைகள்
அவர்களுக்கோ வெறும் குப்பையாய்

இனி நானோ ..
ஆரோக்கியமான கவிதைகள் வரும் வரை

சேமிக்க தொடங்கினேன்
குறையாய் பிறந்த என் கவிதை குழந்தைகளை
குப்பையாக்காமல் பொக்கிஷங்களாய்..

~அன்புடன் யசோதா காந்த் ~

வலி .....









நாட்களும் நொடிகளும்
 நகர மறுப்பதேன் ?

உண்ணாமல் ...நீர் அருந்தாமல் இருந்தும்
பசிப்பதில்லையே  ஏன் ?

உறவெல்லாம் உடன் இருந்தும்
தனிமை என்னை தழுவியதேன்?

இதய துடிப்பு சீராய் இருந்தும்
உடலும் மனமும் உயிரற்று இருப்பதேன்?

வாழ்க்கையில் மற்ற ஒன்றிலும்
தேடல் இல்லையே ஏன்?

கத்தியின்றி காயம்இன்றி
வலிகள் ஏன்?

காதலெனும் நோயினால்
உடலும் மனமும் உருக்குலைந்து போவதேன் ?

பெரும் பிணிக்கெல்லாம் தீர்வு உண்டே
காதல் நோய்க்கு மருந்து இல்லையே  ஏன் ?

ஏன் ஏன் ஏன் என்று
மனம் மருகி உருகி தவிப்பதேன் ?

~அன்புடன் யசோதா காந்த் ~

காதலர் தினம் ....









பூக்களும் காதல் பரிசுகளும்
குவிந்து கிடக்க

வாழ்த்துவோரும் வழங்குவோரும்
குழுமி இருக்க

நாகரீக காதலரோ
ஆடி பாட

கிராமத்து காதலரோ
திரை அரங்கு கோயில்குளம் தேட


புதிதாய் பூத்த காதலரோ
தவி தவிக்க

காதலில் வெற்றி கண்டவரோ
பெருமை கதை பேச

காதல் தோல்வி கொண்டவரோ
பார்க்கும் ஜோடிகளை வசை பாட

இனிதே தொடரட்டும்
இனிய காதலர் தினங்கள்

இன்புற வாழட்டும்
உண்மை காதலர்கள்

~அன்புடன் யசோதா காந்த் ~

அன்னை போல நீயும் .....







அன்பே என் தாயின் அணைப்பை
உன்னில் உணர்ந்தேனே
தாய் அவள் தவிப்பை
உன்னில் அறிந்தேனே

அன்னை அவள் பரிவை
உன்னில் கண்டேனே
அன்பான  அவள் கொஞ்சல்களை
உன்னிடம் அனுபவித்தேனே

அன்னை அவள் பொய் கோபம்
உன்னிடமும் அப்படியே
பாசமிகுதியால் சின்னசின்ன சண்டை
நம்மிலும் நடக்கிறதே

என் அன்பு காதலா
நீயும் என் தாயின் சாயலே
உன் மடிமீது தலைவைத்து
நானும் சிறு குழந்தை போலானேனே

`அன்புடன் யசோதா காந்த் ~

அன்புள்ள அம்மாவுக்கு ....









அம்மா உன்னை பார்க்க ஆசை
காதலின் வேகத்தில்
உன்னை மறந்தேனே
நானே தாயானபோதோ 
தவறுகளை உணர்ந்தேனே

என்னை விழிக்குள் 
வைத்தல்லவா நீ வளர்த்தாய்
எனக்கு பிடித்த உணவுகளையல்லவா
பார்த்து பார்த்து சமைத்தாய்

ஒரு நிமிடம் உன்னை மறந்து
என்னவர் பின் நடந்தேனே
உன்னை பிரிந்த பின்னும் 
ஒவ்வொரு நொடியும்
என் நினைவே நீயானாயே

உந்தன் வலியை எந்தன்
மகபேறு தன்னில் உணர்ந்தேனே
மன்னிப்பாயா என்னை மன்னிப்பாயா
நீ வேண்டும் அம்மா மீண்டும் எனக்கு
நான் குழந்தையாய் மாறி
உன் புடவை தலைப்பால் 
முகம் மறைத்து விளையாட

நீ தலை தடவ உன் மடிமீதுறங்க
உன் கன்னம் உரசி முத்தமிட
என் இன்ப காலம் இனியும் வேண்டும்
அழைக்கிறேன் என் அன்பு அன்னையே ..

~அன்புடன் யசோதா காந்த் ~

சொல்மனமே சொல் ...








சொல்மனமே சொல்
நடப்பவை  யாவும் நன்மைக்கே  என்று

அச்சம் என்று எதுவும் இல்லை
தோல்விகள் கண்டு துவளுவதும் இல்லை
துயரங்களில் தோய்ந்து போவதும் இல்லை
எதிர் காலம் கருதி கலங்குவதும் இல்லை
மரணம் விரைவில் வரும் என தெரிந்தாலும்
எக்காலத்திலும் எந்த நேரத்திலும்

சரியோ ..
தவறோ
எதுவாயினும்
சொல் மனமே சொல்
நடப்பவை யாவும் நன்மைக்கே  என்று 

~`அன்புடன் யசோதா காந்த் ~

சாதி ....











ஆதியில் சாதி இருந்ததோ ?
மேல் மக்கள்  கீழ் மக்கள் உண்டோ ?
ஆண் பெண் இருபாலர்  அல்லவா?

அன்பென்ற தாய் பெற்ற பிள்ளைகள்
அனைத்தும் ஓர் குலம் அன்றோ ?

இறந்த உடல்கள் அனைத்தும்
பிணம்எனும் ஒற்றை பெயர்தானே ?

அறுத்தெறிவோம் ஜாதி எனும் ஆணி வேரை

பாரதி கண்ட கனவு
பாரதத்தில்  பலிகட்டுமே

உறுதி எடுப்போம் தீண்டாமை
இனி இல்லை என்று ..

அறிவில்லாதோர் காட்டும் இரட்டை குவளை
முறை அழிப்போம்

சாதி என்ற பெயரில்  அடிமைத்தனம்
ஆள்வோரை ஒழிப்போம்

வாழ்க பாரத அன்னை
வளர்க நம் பாரதம் ..


~அன்புடன் யசோதா காந்த் ~

கனவுகளே .....





இரவுகள் தோறும் எண்ணிலா   கனவுகள் ...


புரியாத இன்பம் தரும் கனவுகள்
அறியாத துக்கம் தரும் கனவுகள்

மோகினி பேய்களுடன் கைகோர்க்கும் திகில் கனவுகள்
பகைமை உணர்த்தும் பழிக்குப் பழி கனவுகள்

காதலை அள்ளி தெளிக்கும் காதலான கனவுகள்
உணர்வுகளை தூண்டும்  காம கனவுகள்

பொன்னும் பொருளும் கண்டு மயங்கும் ஆசை கனவுகள்
பாம்பும் தேளும் ஊரும்  கோர கனவுகள்

பிரிந்த சொந்தங்கள் சேரும் பாச கனவுகள்
ஏதேதோ முகமுடி இட்ட வேசகனவுகள்

குழந்தையாய் மனம் மகிழும் அற்புதகனவுகள்
உயிர் போகும் வலியுள்ள மரணகனவுகள்

விடிந்ததும் ...

மாறாமல் மனதில் நிலைத்திருக்கும் சில கனவுகள்
நினைத்து பார்த்தும் நினைவில் வராத பல கனவுகள்

~அன்புடன் யசோதா காந்த் ~

பூங்காற்று ...





வல்லரசுகள் இரண்டும்
   மோதிகொண்டும் 
கூட்டணி சேர்ந்துகொண்டும்
இடியும் மின்னலும் இல்லறத்திலேயே

வீட்டில் ஒளி தரும் தீபங்களோ
நிம்மதி  விளக்கினை
அணைக்கும் முயற்சியிலே
அடக்கும் முயற்சியில் மாமியார்களும்
சுதந்திரம் பேசிக்கொண்டே மருமகள்களும்
தன் இளமை பருவம் மறந்த பெரியவர்கள்
தன் தாயின் முதுமையை  மறந்த சிறியவர்கள்

தலைமுறை தலைமுறையாய்
தொடரும் குடும்ப பூகம்பங்கள்
மகளாய் மருமகளையும் தாயாய் மாமியாரையும்
எண்ணும் இல்லத்திலே என்றும்  வீசுமே 
மணமுள்ள பூங்காற்று ...
~ அன்புடன் யசோதா காந்த் ~