கருணை இல்லா கற்புக்கரசி...




பத்தினி பெண் நீ என்பதால்
உன்னை தலை வணங்குகிறேன்
மதுரையை நீ எரித்ததால்
உன்மேல் எரிச்சல் அடைகிறேன்...
ஈ எறும்பினை கொல்வதே பாவம் அன்றோ
நீயோ  எத்தனையோ உயிர்களை
இரக்கமின்றி கொன்றாயே
உன் கணவன் ஒன்றும் உத்தமன் இல்லையே
உன்னை விட்டு
மாதவி காலடியில் கிடந்தவன் ஆயிற்றே
ஒரு வேளை
உத்தமனாய் அவன் இருந்திருந்தால்
உலகத்தையே அழித்திருப்பாயோ ???

பெண் என்றால் பேயும் இரங்குமே
இதயமே இல்லாதவளா பெண்ணே நீ ??
புத்தகங்கள் வேண்டுமானால் உனை புகழட்டும்
எனக்கு உன் மேல் என்றென்றும் கோபமே !
~ அன்புடன் யசோதா காந்த் ~

மனம்......




காலைக்கதிரவன்
கண்சிவந்து நிற்க
காரணம் நான் கேட்க
ஏதேதோ அவன் சொல்ல
நேரமும் நகர்ந்தது மெல்ல ..
சுள்ளென்று அவன் சுட்டெரிக்க
சட்டென்று என் மனமும் எரிச்சல் கொள்ள
குளிர்தரும் மழையே நன்று
நீயோ கொடியவன் என்றேன் ..அவனிடம்
புரிந்து கொள்வாய் நீயென எள்ளி நகையாடினான் ..

சிறிது நாட்கள் சென்றதும்
நான் விரும்பிய குளிர்காலம் வந்தது
சில தினங்கள் அனுபவித்தேன் ஆவலாய்
வீட்டின் உள்ளும் புறமும் இதமான குளிர்
இடைவெளி இல்லா அடைமழையும்

நாட்கள் செல்ல செல்ல
அலுத்தது  அதுவும் எனக்கு
மழையினால் வேலைகள் கூட முடங்கி போனது
பகலில் கூட இரவின் சாயல்
மெல்ல தேடியது மனம் உச்சிவெயில் வேண்டுமென்று ..
அடை மழை கூடித்தான் போனது ...
எனக்கு மட்டுமல்ல
என் வீட்டு மிருக  ஜீவன்களுக்கும்
மழை பிடிக்காமல் போனது ..

கண்கள் கிழக்கில்
கதிரவன் வரவை காண
இறைவனை
வேண்டி நின்றது மனம்
வெயிலில் மழையையும்
மழையில் வெயிலையும்
தேடும் மனதை என்னவென்பது ??

~ அன்புடன் யசோதா காந்த் ~