வேஷம் ...






ஒவ்வொரு வயதிலும் பலவகை ஆசைகள் 
சொந்தங்கள் மீது தீராத காதல்கள்  
சேர்ந்திருக்கும் போது பூத்திடும் மகிழ்ச்சிகள் 
பிரிவுகளில் தாங்கமுடியாத  துயரங்கள்
காலங்கள் தரும் அனுபவங்கள் 
நிரந்தரமாய் தாக்கும் சோகங்கள் 
அருவியாய் கொட்டும் தத்துவங்கள் 
மறந்த கமைகள் ...
மறுத்த உண்மைகள் ..
கல்யாணம் எனும் பந்தங்கள் 
அங்கேயும் அரங்கேறும் நாடகங்கள் 
சொல்லும் கதைகள் சில
சொல்லாத கதைகள்  பல 
காட்சி முடிந்த பின்னும் 
கலைய மறுக்கும் வேஷங்கள் ......
~ அன்புடன் யசோதா காந்த் ~

திரு நங்கைகள்




கடவுளுக்கோ குழப்பமாய்
தாய் தகப்பனுக்கோ
அவமான சின்னமாய்
உடன்பிறப்புகளுக்கோ கேலியாய்
உறவினர்களுக்கோ ...வேடிக்கையாய்
சமுதாயத்திற்கோ கேள்வியாய்
அரசாங்கத்துக்கோ தலைவலியாய்
எங்களுக்கோ வாழ்க்கை தவிப்பாய்
நாங்களும் மனிதர்கள் தானே
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பர்
மன்னராய் வேண்டாம் மனிதராய் மதியுங்கள்
சீரியல் பார்த்து அழுவோர்களும்
இரங்க மனமில்லா எங்களிடம்
தாயே அணைக்க மறுத்த சேய்கள் நாங்கள்
வேறு யார் வந்துதான் நெஞ்சோரம் சாய்ப்பாரோ
தத்து எடுத்தோம் எங்களுக்குள் பல உறவுகளை
மனம் குமுறுகிறோம்
மனிதாபிமானம் என்றால் ??????????
~ அன்புடன்  யசோதா காந்த் ~

பெண் ....




புதுமை   உலகை படைக்க
புயலாய்  புறப்பட்டவள்
வாழ்க்கை   படகை காக்க
வரம் வாங்கி வந்தவள்
மானிட பிறவிக்கு எல்லாம்
ஆதி உயிர் தந்தவள்
தாயாய் தாரமாய்
சகோதரியாய் நண்பியாய்
ஏற்ற பாத்திரங்களில்
கடமையாய் கருத்தாய்  செய்பவள்
எங்கும் எதிலும்
கருவாய் அவளே பெண் .....
~ அன்புடன் யசோதா காந்த் ~

ஆறு...




துள்ளி துள்ளி விழும்
           வெள்ளி மலையருவியின்
செல்ல மகள் நான்
              என் காதலன் கடல் நாயகனை
சேர காடு மலை கடந்து
              நாடு புறங்களில் ஓடி
பாடி ஆடும்
             பருவ மங்கை நான்
என் இரு புறமும்
               செடி கொடிகளும்
பூக்கும் மரங்களும்
               வழித்துணையாய் என்னோடு
கதைகள் பேசி
                 கருத்துகள் பரிமாறி
நடகின்றன ....
                   காதலனை காணப்போகும்
துடிப்பின் வேகம் குறைக்காது
                  எனக்குள்ளே ...
கொஞ்சிகுலவும்    மீன்கள் கூட்டம்
                    ஓரமாய் எட்டிப்பார்க்கும்
மீன்கொத்தி கூட்டம்
                  என் சலசலப்பின் சத்தத்தில்
கவி பாடும் ...
                   பறவைகள் கூட்டம்
என் வழிகளில் ....
                     வண்ண பூக்களின் கூட்டம்
இந்த இயற்கையின் ...
                     அழகை படைத்த
இறைவனை வணங்கி கொண்டே
                    என்னவனை போய் சங்கமித்திடுவேன்

~ அன்புடன் யசோதா காந்த் ~

எமன் ...


உயிரை பறித்து 
உயிரை  நெரித்து
உயிரை   கொன்று
உயிரை தின்று
உயிரை முடித்து
உயிரை குடித்து
எனக்கே எமனான
என் உயிரே
உனை அமுதென்று பருகினேனே ..
விஷமாய் எனை கொல்கிறாயே ?.. .................
~ அன்புடன் யசோதா காந்த் ~

அனாதை


பிறக்கும் குழந்தைகள் எல்லாம் 
தவமாய் பிறந்தவர்களா ??
தண்டனையாய் பிறந்தவர்களா ??
எங்களை பெற்றவர்களை
எங்கோ தொலைத்து விட்டோம் ..
 
அள்ளி அணைக்க அன்னை இல்லை ...
அறிவை சொல்ல தந்தை இல்லை ..
கொஞ்சி மகிழ
உடன்பிறப்புகள் இல்லை ..
சொந்தமென்று சொல்ல
உறவுகளும் இல்லை ..
  
எனினும்
எங்களுக்குள் சில நல்ல விஷயங்கள்
ஜாதி மத பேதம் எங்களுக்குள் இல்லை ..
ஏழை பணக்காரன் ஏற்றத்தாழ்வுகள்  இல்லை
பொன்னுக்கும்  மண்ணுக்கும் ஆசை இல்லை
புன்னகைக்கு  குறைவில்லை என்றுமே எங்களுக்குள் ...
  
வாழ்க்கையை ஜெயிக்கும் போராட்டத்தோடு
அன்பெனும் ஆதரவை நாடும்
அனாதை விடுதியின்
ஆண்டவன் கைப்பிழைகள்  நாங்கள்................

~ அன்புடன் யசோதா காந்த் ~

காதல் தேவதை




ஒரு இளவேனிற்காலத்தில்
இனியமாலை பொழுதில் ..
மெல்லிய இருட்டில்
தந்திரங்கள் பல கற்ற
மந்திரப் பெண்ணை கண்டேன் ..
கண்களிலே மாயம் காட்டி
நெஞ்சினிலே காயம் செய்தாள்
இவள் மானிட மங்கையோ ?
தேவலோக தேவதையோ ?
நடு நிஷி மோகினியோ ?
இனி ஒரு நாள் வருவாளோ ?
அவள் பெயர் தான் என்னவோ ?...
அந்த பின்னலிட்ட சின்ன கொடியாளை
காலமெல்லாம் காத்திருப்பேன் நான் காண்பதற்கு ...
காதலித்தே அவளை கைப்பிடிப்பதற்கு .................

~ அன்புடன் யசோதா காந்த் ~

திணறல்..




புகைப்படங்களில் உனை
கண்ணிமைக்காமல் பார்த்திருந்தேன்
நேரில் பார்த்த போதோ
வெட்கம் திரைகளாக
விழிகள் மூடிக்கொண்டதே ...


நான் உன்னோடு பேச
ஆசைப்பட்டபோதோ
நான்கு குணமும் தடுக்கிறதே ...
ஆசைகளை
அணை போட முடியாமல்
மனம் ஆகாயத்தில் சிறகடிக்க
உன் மூச்சு காற்றை நான் சுவாசிக்க
இங்கே ஒரு மூச்சு திணறல் போராட்டம் நடக்கிறதே...
காதலை அடக்க காதலால் தான் முடியுமே ???.................

~ அன்புடன் யசோதா காந்த் ~

அண்ணன் ...


ஒரு கொடியில் மலரவில்லை 
தொப்பிள்கொடி உறவுமில்லை
ரத்த பந்த சொந்தமில்லை
துன்பத்தில் தோள் கொடுக்கவும்
இன்பத்தில்  குதூகலிக்க .
துவண்ட பொழுதில் தூக்கி நிறுத்தவும்
என் உடன் பிறப்பாய்
எங்கிருந்தோ வந்தான்
அண்ணன் உன் துணை நான் என்றான் ...
  
அண்ணனே ஆலமரமாய் நீ எனக்கு
ஆனந்தமாய் ஊஞ்சல் ஆடுகிறேன் .. 

~ அன்புடன் யசோதா காந்த் ~
  
(எனது உடன் பிறவா அண்ணன் ஒப்பிலியன் பாலு அவர்களுக்காக ... ) 

மறந்து விடு...



உறக்கமில்லா இரவுகளும் 
கலங்கி தவித்த நினைவுகளும் ..
போதும் ..போதும் .. .
மறந்து விட்டேன்  உன்னை ..
மறந்து விடு என்னை ..
விட்டு  விடு என்னை
தொடராதே  என்னை ..
நிம்மதியை தேடி  என் பயணம்
தொடரட்டும் தனியே  ....
சிறகடிக்கும் பறவையாய் .................

~ அன்புடன் யசோதா காந்த் ~  

அன்பே..



அன்பே உன் கண்கள்
   எனும் சிப்பிக்குள்
முத்தாய் இருக்கும் என்னை
   ஒருவரும் கன்னமிடாமல்
கண் மூடி வைத்துக்கொள் ......

~ அன்புடன் யசோதா காந்த் ~ 

நீ நான் ...



பூவாய் நீ
அதில் புதைந்த மகரந்தமாய் நான்
மகரந்தமாய் நீ
அதில் மயங்கும் வண்டாய் நான் ..

கவிதையாய் நீ
அதில் கலந்த வரிகளாய் நான்
வரிகளாய் நீ
அதை வடித்த கவிஞனாய் நான்

வானவில்லாய் நீ
அதில் வண்ணங்களாய் நான்
வண்ணங்களாய் நீ
அதை தீண்டும் தூரிகைகளாய் நான்

கானங்களாய் நீ
அதில் கலந்த ராகங்களாய் நான்
ராகங்களாய் நீ
அதை இசைக்கும் ஒலிகளாய் நான் ..

புல்லாங்குழலாய் நீ
அதை மீட்டும் உதடுகளாய் நான்
உதடுகளாய் நீ
அதை மூடும் உதடுகளும் நான்

வாய்க்காலாய் நீ
அதன் வரப்போர செடிகளாய் நான்
செடிகளாய் நீ
அதன் உயிர் வேர்களாய் நான்

விழிகளாய் நீ
அதன் நடுவே கண்மணியாய் நான்
கண்மணியாய் நீ
அதை தாங்கும் வெண் திரையாய் நான்

மொழிகளாய் நீ
அதில் முதலாம் தமிழாய் நான்
தமிழாய் நீ
தமிழின் அமுதாய் நான்

 
~ அன்புடன் யசோதா காந்த் ~ 

கேள்வி...



விதைக்கும் விதைகள் எல்லாம்
     செடிகளாய் முளைக்குமா ?
முளைக்கும் செடிகளெல்லாம்
     மரங்களாய் வளருமா ?
வளர்ந்த மரங்கள் எல்லாம்
       உயிரனங்களுக்கு நிழல் தருமா ?
நிழல் தரும் மரங்கள் எல்லாம்
        நெடுநாள் உயிர் வாழுமா?
நெடுநாள் வாழும் மரங்கள் எல்லாம்
          பூத்து காய்த்து   கனி தருமா ?
பூக்கும்    கனிகள்ளெல்லாம்
            தகுந்த இடம் போய் சேருமா ?
அடுக்கடுக்காய் கேள்விகள்
            விடை தேடும் விடைகள்

~ அன்புடன் யசோதா காந்த் ~  

காதல் (?)




ஒருவரை ஒருவர் சந்தித்தோம்
கண்களால் பரிமாறி கொண்டோம்
வணக்கம் சொல்லி ஆரம்பித்தோம்
ஏதேதோ உரையாடினோம்
சில நிமிடங்கள் பேச நினைத்தோம்
பல கணங்களாய் தொடர்ந்தோம்
நாளை பேசி கொள்ளலாமே
என நினைத்த போதோ
மனமின்றி  விடைபெற்றோம்
என்ன பேசினோம் ? எதை பற்றி பேசினோம் ?
விடை தெரியவில்லை
மனதில் மற்றும் ஒரு கேள்வி
இது என்ன ?   காதல் ?.........

~ அன்புடன் யசோதா காந்த் ~

சின்ன சின்ன ஆசை


மழையில் நனைந்து 
     துள்ளி  குதிக்க வேண்டும்
களிமண் பூசிக்கொண்டு
     வெயிலில் காய வேண்டும்
உயரமான மலைகளில்
     ஏறி இறங்க வேண்டும்
பனிக்கட்டியின் நடுவில்
     படுத்து உறங்க வேண்டும்
பூக்களின்  மத்தியில்
      புகைப்படம் எடுக்கவேண்டும்
பாக்கள் பல பாடி
       பரிசுகள் வாங்க வேண்டும்
வேகமாய் ஓடும் ஆற்றில்
       எதிர்   நீச்சல் போட வேண்டும்
முடிவே இல்லாத பாதையில்
        பயணம் போக வேண்டும்
ஒரு நாளேனும் நானும்
         முதல்வர் ஆகவேண்டும்
உறவே இல்லாத உயிர்கள் எல்லாம்
         என் சொந்தங்கள் ஆகவேண்டும்
கவலைகள் எதுவும் இன்றி வாழ் நாள்  முழுவதும் 
          சிரித்து மகிழ வேண்டும் ......
~ அன்புடன் யசோதா காந்த் ~