அனாதை


பிறக்கும் குழந்தைகள் எல்லாம் 
தவமாய் பிறந்தவர்களா ??
தண்டனையாய் பிறந்தவர்களா ??
எங்களை பெற்றவர்களை
எங்கோ தொலைத்து விட்டோம் ..
 
அள்ளி அணைக்க அன்னை இல்லை ...
அறிவை சொல்ல தந்தை இல்லை ..
கொஞ்சி மகிழ
உடன்பிறப்புகள் இல்லை ..
சொந்தமென்று சொல்ல
உறவுகளும் இல்லை ..
  
எனினும்
எங்களுக்குள் சில நல்ல விஷயங்கள்
ஜாதி மத பேதம் எங்களுக்குள் இல்லை ..
ஏழை பணக்காரன் ஏற்றத்தாழ்வுகள்  இல்லை
பொன்னுக்கும்  மண்ணுக்கும் ஆசை இல்லை
புன்னகைக்கு  குறைவில்லை என்றுமே எங்களுக்குள் ...
  
வாழ்க்கையை ஜெயிக்கும் போராட்டத்தோடு
அன்பெனும் ஆதரவை நாடும்
அனாதை விடுதியின்
ஆண்டவன் கைப்பிழைகள்  நாங்கள்................

~ அன்புடன் யசோதா காந்த் ~

காதல் தேவதை




ஒரு இளவேனிற்காலத்தில்
இனியமாலை பொழுதில் ..
மெல்லிய இருட்டில்
தந்திரங்கள் பல கற்ற
மந்திரப் பெண்ணை கண்டேன் ..
கண்களிலே மாயம் காட்டி
நெஞ்சினிலே காயம் செய்தாள்
இவள் மானிட மங்கையோ ?
தேவலோக தேவதையோ ?
நடு நிஷி மோகினியோ ?
இனி ஒரு நாள் வருவாளோ ?
அவள் பெயர் தான் என்னவோ ?...
அந்த பின்னலிட்ட சின்ன கொடியாளை
காலமெல்லாம் காத்திருப்பேன் நான் காண்பதற்கு ...
காதலித்தே அவளை கைப்பிடிப்பதற்கு .................

~ அன்புடன் யசோதா காந்த் ~

திணறல்..




புகைப்படங்களில் உனை
கண்ணிமைக்காமல் பார்த்திருந்தேன்
நேரில் பார்த்த போதோ
வெட்கம் திரைகளாக
விழிகள் மூடிக்கொண்டதே ...


நான் உன்னோடு பேச
ஆசைப்பட்டபோதோ
நான்கு குணமும் தடுக்கிறதே ...
ஆசைகளை
அணை போட முடியாமல்
மனம் ஆகாயத்தில் சிறகடிக்க
உன் மூச்சு காற்றை நான் சுவாசிக்க
இங்கே ஒரு மூச்சு திணறல் போராட்டம் நடக்கிறதே...
காதலை அடக்க காதலால் தான் முடியுமே ???.................

~ அன்புடன் யசோதா காந்த் ~

அண்ணன் ...


ஒரு கொடியில் மலரவில்லை 
தொப்பிள்கொடி உறவுமில்லை
ரத்த பந்த சொந்தமில்லை
துன்பத்தில் தோள் கொடுக்கவும்
இன்பத்தில்  குதூகலிக்க .
துவண்ட பொழுதில் தூக்கி நிறுத்தவும்
என் உடன் பிறப்பாய்
எங்கிருந்தோ வந்தான்
அண்ணன் உன் துணை நான் என்றான் ...
  
அண்ணனே ஆலமரமாய் நீ எனக்கு
ஆனந்தமாய் ஊஞ்சல் ஆடுகிறேன் .. 

~ அன்புடன் யசோதா காந்த் ~
  
(எனது உடன் பிறவா அண்ணன் ஒப்பிலியன் பாலு அவர்களுக்காக ... ) 

மறந்து விடு...



உறக்கமில்லா இரவுகளும் 
கலங்கி தவித்த நினைவுகளும் ..
போதும் ..போதும் .. .
மறந்து விட்டேன்  உன்னை ..
மறந்து விடு என்னை ..
விட்டு  விடு என்னை
தொடராதே  என்னை ..
நிம்மதியை தேடி  என் பயணம்
தொடரட்டும் தனியே  ....
சிறகடிக்கும் பறவையாய் .................

~ அன்புடன் யசோதா காந்த் ~  

அன்பே..



அன்பே உன் கண்கள்
   எனும் சிப்பிக்குள்
முத்தாய் இருக்கும் என்னை
   ஒருவரும் கன்னமிடாமல்
கண் மூடி வைத்துக்கொள் ......

~ அன்புடன் யசோதா காந்த் ~ 

நீ நான் ...



பூவாய் நீ
அதில் புதைந்த மகரந்தமாய் நான்
மகரந்தமாய் நீ
அதில் மயங்கும் வண்டாய் நான் ..

கவிதையாய் நீ
அதில் கலந்த வரிகளாய் நான்
வரிகளாய் நீ
அதை வடித்த கவிஞனாய் நான்

வானவில்லாய் நீ
அதில் வண்ணங்களாய் நான்
வண்ணங்களாய் நீ
அதை தீண்டும் தூரிகைகளாய் நான்

கானங்களாய் நீ
அதில் கலந்த ராகங்களாய் நான்
ராகங்களாய் நீ
அதை இசைக்கும் ஒலிகளாய் நான் ..

புல்லாங்குழலாய் நீ
அதை மீட்டும் உதடுகளாய் நான்
உதடுகளாய் நீ
அதை மூடும் உதடுகளும் நான்

வாய்க்காலாய் நீ
அதன் வரப்போர செடிகளாய் நான்
செடிகளாய் நீ
அதன் உயிர் வேர்களாய் நான்

விழிகளாய் நீ
அதன் நடுவே கண்மணியாய் நான்
கண்மணியாய் நீ
அதை தாங்கும் வெண் திரையாய் நான்

மொழிகளாய் நீ
அதில் முதலாம் தமிழாய் நான்
தமிழாய் நீ
தமிழின் அமுதாய் நான்

 
~ அன்புடன் யசோதா காந்த் ~ 

கேள்வி...



விதைக்கும் விதைகள் எல்லாம்
     செடிகளாய் முளைக்குமா ?
முளைக்கும் செடிகளெல்லாம்
     மரங்களாய் வளருமா ?
வளர்ந்த மரங்கள் எல்லாம்
       உயிரனங்களுக்கு நிழல் தருமா ?
நிழல் தரும் மரங்கள் எல்லாம்
        நெடுநாள் உயிர் வாழுமா?
நெடுநாள் வாழும் மரங்கள் எல்லாம்
          பூத்து காய்த்து   கனி தருமா ?
பூக்கும்    கனிகள்ளெல்லாம்
            தகுந்த இடம் போய் சேருமா ?
அடுக்கடுக்காய் கேள்விகள்
            விடை தேடும் விடைகள்

~ அன்புடன் யசோதா காந்த் ~  

காதல் (?)




ஒருவரை ஒருவர் சந்தித்தோம்
கண்களால் பரிமாறி கொண்டோம்
வணக்கம் சொல்லி ஆரம்பித்தோம்
ஏதேதோ உரையாடினோம்
சில நிமிடங்கள் பேச நினைத்தோம்
பல கணங்களாய் தொடர்ந்தோம்
நாளை பேசி கொள்ளலாமே
என நினைத்த போதோ
மனமின்றி  விடைபெற்றோம்
என்ன பேசினோம் ? எதை பற்றி பேசினோம் ?
விடை தெரியவில்லை
மனதில் மற்றும் ஒரு கேள்வி
இது என்ன ?   காதல் ?.........

~ அன்புடன் யசோதா காந்த் ~

சின்ன சின்ன ஆசை


மழையில் நனைந்து 
     துள்ளி  குதிக்க வேண்டும்
களிமண் பூசிக்கொண்டு
     வெயிலில் காய வேண்டும்
உயரமான மலைகளில்
     ஏறி இறங்க வேண்டும்
பனிக்கட்டியின் நடுவில்
     படுத்து உறங்க வேண்டும்
பூக்களின்  மத்தியில்
      புகைப்படம் எடுக்கவேண்டும்
பாக்கள் பல பாடி
       பரிசுகள் வாங்க வேண்டும்
வேகமாய் ஓடும் ஆற்றில்
       எதிர்   நீச்சல் போட வேண்டும்
முடிவே இல்லாத பாதையில்
        பயணம் போக வேண்டும்
ஒரு நாளேனும் நானும்
         முதல்வர் ஆகவேண்டும்
உறவே இல்லாத உயிர்கள் எல்லாம்
         என் சொந்தங்கள் ஆகவேண்டும்
கவலைகள் எதுவும் இன்றி வாழ் நாள்  முழுவதும் 
          சிரித்து மகிழ வேண்டும் ......
~ அன்புடன் யசோதா காந்த் ~   

மறக்க முடியவில்லை..


என் கண்களில் நீ
என் நெஞ்சினுள்  நீ
என் உணர்வுகளில் நீ
என் உயிரினில் நீ
என் உடல் பொருள் ஆவி நீ

இன்று நீ இல்லாத என் நிலை
கண்கள் இரண்டும் பிடிங்கியதுபோல்
நெஞ்சை கசக்கி பிழிந்ததுபோல்
உணர்வுகளை கொன்று போட்டது போல்
உயிரை என்னிடம் இருந்து பறித்து கொண்டது போல்
வழி அறியாது
நிலை குலைந்து
என்னை நினைக்காமல் நீயும்
உன்னை மறக்க முடியாமல் நானும்
சாகாமல் உயிரற்றவளாய் ....
~ அன்புடன்  யசோதா காந்த் ~

கனவுகள் ...







தினமும் இரவுகளில்
இன்ப  கனவுகளில்
அழகாய் வருவாள் பெண்ணொருத்தி
வண்ண ஆடைகள் உடுத்தி
செல்லமாய் கதை சொல்வாள் காதோரத்தில்
அவள் குரலோ ராகமாய்
கிளிபேச்சின் கொஞ்சலாய்
என் மனதிலும்
நாத ஒலியும்..மிருதங்க தாள  ஒலியும்
அவளின் ராகமும்
என் தாளமும்  சங்கீதமாய்
ஆடலும் பாடலும்  விடியும் வரை
விடிந்த பொழுதோ
எல்லாம் மாயமாய்
எனினும் காத்திருப்பேன்
இனிய இரவுகளுக்காய்
என்னவள் வரும்  கனவுகளுக்காய் .....
~ அன்புடன்  யசோதா காந்த் ~

அன்னை..



பூவை விட மென்மை
பாலை விட வெண்மை
நீரை விட தூய்மை
சொற்களில் இனிமை
எல்லாவற்றிலும்  உண்மை
கண்களில் கருணை
அன்பு மட்டுமே கொள்கை
அனைத்தையும் அள்ளி தரும் தன்மை
அவளால் எங்களுக்கு மேன்மை
அவளை பற்றி பேசுவதோ பெருமை
அவள்தான் தாய்மை
ஆசிதரும் அன்னை ....
~ அன்புடன் யசோதா காந்த் ~

சிலந்தி வீடு ..




பார்த்து பார்த்து நான் கட்டிய வீடு
பாழாய் போனது .....
குற்றம் சொன்னார்கள்   என்
பெரியோர்கள் ....
நான் கட்டிய வீட்டிற்கு
நாள் குறிக்கவில்லையாம்
நட்சத்திரம் பார்க்கவில்லையாம்
வாஸ்து படி கட்டவில்லையாம்
வருத்ததுடன் சிலந்தி ,,஋
~ அன்புடன்  யசோதா காந்த் ~

இயற்கை அன்னை ...




இயற்கை பெற்ற அழகிய
ஆறு ...நான் ..உன் தாய்
நான் பெற்ற மகனே ,,,,,,,
எங்கோ பிறந்து காடு மலை கடந்து
காலத்தை வென்று
உருத்தெரியாமல் என்னை சிதைத்த
உன்னை பாக்க
ஓடோடி வரும் என்னை தெரிகிறதா ??
செல்ல மகனே ,????
 
இயற்கை அன்னையை
இருபுறமும் தழுவி
இருகைகளை மழலை போல ஏந்தி
உன்னை நோக்கி வரும் என்னை
ரசாயனம் கலந்து
ரணம் செய்வது புரியுதா செல்ல மகனே ???
~ அன்புடன் யசோதா காந்த் ~

வசந்த காலம்...


அந்த நாள்
நான் மறக்க முடியாத நாள்
நாள்
வாழ்வில்
எல்லைவரை சென்ற நாள்
நீ வந்தாய்
கரம் தந்தாய்
என் குறை கேட்டாய்
உன்னோடு இனி
என்றும் நானென்றாய்
இருண்ட என் வாழ்வில்
ஒளி தந்தாய்
என் வலிக்கு
மருந்தானாய்
நீரற்ற வேராய் இருந்தேன்
நீர்ஊற்றி தளிர்விடச் செய்தாய்
என் இலையுதிர் காலம்
போனது
இனி எனக்குள்
உன்னால் செழிக்கும்
வசந்த காலம் வந்தது...
~ அன்புடன் யசோதா காந்த் ~

மாண்புமிகு மானிடன் !...




முற்றும் துறந்த
முனிவனுமல்ல...
கவிதைகள் பாடும்
கவிஞனுமல்ல...
ஞானம் நிறைந்த
ஞானியுமல்ல...
சத்தியம் பேசும்
மஹானும் அல்ல...
தானங்கள் செய்யும்
தர்மனும் அல்ல...
தீயவை செய்யும்
தீயவனுமல்ல...
பொய்கள் மட்டும் பேசும்
பொய்யனுமல்ல...
திருட்டுகள் செய்யும்
கள்வனுமல்ல...
அட்டுழியங்கள் செய்யும்
அரக்கனுமல்ல...
மூடத்தனம் காட்டும்
மூடனுமல்ல...
ஒன்றுமே தெரியாத
வெகுளியுமல்ல...
கேட்ட வரம் தரும்
கடவுளுமல்ல...
கடவுளை வெறுக்கும்
நாத்திகனுமல்ல...
கடவுளே கதியென்றிருக்கும்
ஆன்மீகவாதியுமல்ல...
மற்றொருவர்கள் ஆட்டிப்படைக்க
பொம்மையுமல்ல...
நான் மனிதன்
இன்பம் துன்பம் தெரிந்தவன்
மாண்புமிகு மானிடன்....
~ அன்புடன் யசோதா காந்த் ~

பொறாமை...



பொறாமை நான் அறியாத ஓன்று
என்னவனே நீ என்னில் ஆனபோதோ
பொறாமையின் மொத்த உருவமாய் நானும்
நீ குளித்தபின்
உன் உடலில் ஒட்டியிருக்கும்
நீர்துளி மேல்...
நீ உடுத்திக்கொள்ளும்
உன் ஆடைகள் மேல்…
உன் உதட்டோரம் ஒட்டியிருக்கும்
தேனீர் கோப்பை மேல்…
நாள்தோறும்
உன் காலை ஒட்டிக்கொண்டிருக்கும்
காலணிகள் மேல்…
நீ கொஞ்சி சிரிக்கும்
எதிர்வீட்டு குழந்தை மேல்...
உன்முகத்தை ஒளியினால்
மிளிர செய்யும் அந்த சூரியன் மேல்...
உன்னை தழுவிச் செல்லும்
தென்றல் காற்றின் மேல்...
உன் கைகள் குலுக்கி
வாழ்த்தும்சொல்லும்  கரங்கள்மேல்..
எங்கும் எதிலும்
எனக்கு பொறாமை மட்டுமே
என் உயிர் காதலா!
~ அன்புடன் யசோதா காந்த் ~

காதல் வந்தது ..



கனவில் உன்னை கண்டேன்
கவிதை வந்தது இன்று
கனாக்காணும் நேரம்
உனை காண்கிறேன்...
உனை கண்ட போதோ
உனக்குள் சிக்கி தவிக்கிறேன்
நீ என் உணர்வில் மிதந்து
உயிரில் கலந்த போதோ
உன்னால் சிரிக்கிறேன்
உன்னை ரசிக்கிறேன்
உன்னால் எனக்கு
இந்த உலகம் பிடித்தது
இந்த வாழ்க்கை இனித்தது
கனவுகளில் நீ  வருவதாலோ
பகலில் கூட
இமைகள் இரண்டும்
திறக்க மறக்கிறது...
உன்னை கண்மூடி காண துடிக்குது.......
~ அன்புடன் யசோதா ~

காதல் திருமணம்..


கண்களில் கனவுகளை சுமந்து
அன்பு மிக்க உறவுகளை துறந்து
இரவோடு இரவாய் உன்னோடு
கைபிடித்து நடந்தேனே
என் காதலா...
உன்னோடு நான் நடக்கும் பாதையில்
பூக்களை படுக்கை ஆக்குவாய்
என் விழிமூடும் இமையாவாய்
என் காலமெல்லாம்
என்னை சாய்த்து கொள்ளும் தூணாவாய்
என்றெண்ணி கரம்பிடித்தேன்
ஆனால் எல்லாம் தலைகீழானதே
நான் கண்ட ஈரம் கானல் நீரானதே
முட்கள் நிறைந்த பாதையானதே
நான் மட்டும்  அழுதால் போதாதென
என்னோடு சேர்ந்தழ
இன்னுமொரு துணை தந்தாயே
பிள்ளை உருவில் ....
~ அன்புடன் யசோதா ~

நானும் சொல்வேன்..



கோவில் மீது நம்பிக்கை இல்லை - எனக்கு
கல்லுக்கு காது கேட்குமோ
கல்லும் வாய் பேசுமோ
நாத்திகன் என்பார்கள் என்னை
இப்போதல்லவா நாத்திகன் ஆனேன்
ஆயிரம் வேண்டுதல்கள் நானும் செய்தேன்
ஏதும் ஈடேறவில்லை
ஒன்றேனும் நடந்திருந்தால்
நானும் சொல்வேன்
நீ கல் இல்லை
கடவுள் என்று
(மன்னிக்கவும் தெய்வத்தை நிந்திக்கவில்லை .....விரக்தியில் )
~ அன்புடன் யசோதா ~

மழை



அது ஒரு மழை காலம்
குடையுடன் நான்
பேருந்து  நிழற்குடையின் கீழ்
அவள் வந்தாள் என் அருகில்!!!
கை கடிகாரம் பார்த்து
சண்டை போட்டாள் மழையிடம்!!!!
திடீரென திரும்பியது - அந்த
நனைந்த தேவதை -என்னை
மறந்தேன் அவள் பார்வையில்....
குடை நீட்டினேன் அவளிடம்
வாங்க மறுத்து முறைத்தாள் என்னிடம்
அவளுக்கு கோபம் மழை மீது
எனக்கோ காதல் மழை மீது
அவளோ மழை நின்றுபோக வேண்டினாள்
நானோ மழை நிற்க கூடாது என வேண்டினேன்
மழையிலும் வியர்த்தது எனக்கு......                                                        
~ அன்புடன்  யசோதா காந்த் ~

கொடுமை ..


மாமியார் மாமனாரின்
முள்ளாய் குத்தும் வார்த்தைகள்
நாத்தனார் கொழுந்தியாள்களின்
நெஞ்சை கிழிக்கும் கேள்விகள்
என் வருகை கண்டதும்
சகுனம் பார்க்கும் ஜாதி சனம்
ஏக்கங்கள் தனக்குள் வைத்து
எனக்காய் மட்டும் சிரிக்கும் கணவன்
என் அழுகை புலம்பல்களை
அன்றாடம் கேட்கும் கோவில் தூண்கள்
உணர்ச்சியும் உயிரும் உள்ள
நடை பிணமாய் நானும்
பெண்மைக்கே உரித்தான தாய்மை
அடையாத எனக்கு
பால் கொடாத மார்புகளும்
கர்ப்பம் சுமக்கும் கருவூலமும்
எதற்கு ?
இறைவா என்னை கொன்று போடு
இல்லை என்றால் பிள்ளை ஒன்று கொடு ..

(நாகரீகம் என்னதான் வளர்ந்தாலும் நாட்டுப்புறங்கள்  இன்னும் மாறவில்லையே ) அன்புடன் உங்கள் யசோதா காந்த்

பூ மாலைகள் ..



திருவிழா காலங்களில் நாங்கள் வீரமாய்
திருமணங்களில் நாங்கள் சந்தோசமாய்
திறப்பு விழாக்களில் நாங்கள் அழகாய்
பள்ளி விழாக்களில் நாங்கள் பூரிப்பாய்
பாராட்டு விழாக்களில் நாங்கள் கம்பீரமாய்
அரசியல் விழாக்களில் நாங்கள் அப்பாவியாய்
சவ ஊர்வலத்தில் நாங்கள் மௌனமாய்
சமாதியில் மட்டும் நாங்கள் ஏனோ சங்கடமாய்....
பூஜைகளில் நாங்கள் புனிதமாய்
எல்லாவற்றிலும் நாங்கள் நறுமணமாய் என
பூ மாலைகள் ..... அன்புடன் உங்கள் யசோதா காந்த் 

யார் இவனோ...



மின்னும் என் கண்களில்
மின்னலாய் வந்தவனே
மின்சாரமாய் பாய்ந்து
மின் மினி  பூச்சியாய்
என்னை மின்ன செய்தவனே
கண் இமைக்கும் நேரத்தில்
என்னுள் காற்றாய் கலந்தவனே
ஒரு நிமிட பார்வையில்
உயிரில் உறைய வைத்தவனே
கண்ணுக்குள் உன்னை நிறுத்தி
கண்மூடி உன் உருவம் காண செய்தவனே
உன்னிடம்  காணும் ஆணழகை
கண்டதில்லையே என் கண்களிலே
யார் இவனோ ?  இவன் .தான்
மாயவனோ அந்த மன்மதனோ ,,,,,,,
~ அன்புடன்  யசோதா காந்த் ~

கறவை மாடுகள்...




எங்களுக்கு ரொம்ப வருத்தமுங்க
சொல்வதற்கு எங்களுக்கு தயக்கமுங்க
மறுக்கமுடியாத உண்மைங்க
மனுசங்க நீங்க மறுப்பீங்க
ஆளுக்காளு அக்கறையா சொல்லுவீங்க
தாய் பாலு ரொம்ப முக்கியம்னுங்க
பிறக்கும் பிஞ்சு குழந்தைகளுக்கெல்லாம்
சீம்பாலு ரொம்ப ரொம்ப முக்கியம்னுங்க
அது உங்களுக்கு மட்டும்தான் பொருந்துதுங்க
எங்களுக்கோ ஏறுமாற  நடக்குதுங்க
எங்க புள்ளைகளுக்கு  தான் ஏனோ
தாய் பாலு கொடுப்பினை இல்லீங்க
சீம்பாலோ கிடைக்கிறதே இல்லீங்க
ஊருக்கெல்லாம் பால் நாங்க கொடுக்குறோமுங்க 
நாங்க பெத்த புள்ளைங்களுக்கு பாலாகுதுங்க
புண்ணாக்கும் தவிட்டு தண்ணியும் தானுங்க
யுக யுகமா இதுதான் நடக்குதுங்க ...
( குறை கூறும்  கறவை மாடுகள்  )
~ அன்புடன் யசோதா ~

கல்வி...



வெளிச்சம் தரும்
தீப்பெட்டி  தொழிற்சாலையில்
கல்வி விளக்கணைந்த
குழந்தை தொழிலாளர்கள்
இலவசமாய் டிவி , கணினி
ஏதாவது  தரும் அரசாங்கமே
உருப்படியாய் எதாவது செய்
இவர்களின் கல்வி விளகேத்தி  வை ...
~ அன்புடன் யசோதா~

அச்சம்..


அச்சமில்லை அச்சமில்லை
என்றான் அன்று பாரதி
ஆனால் இன்றோ
அரசியலை நினைத்தால் அச்சம்
அங்கங்கே உலவும்
தீவிரவாதம் நினைத்தால் அச்சம்
எங்கும் எதிலும் லஞ்சம்
அதனால் அச்சம்
மேலே மேலே ஏறிக்கொண்டு போகும்
விலைவாசியினால் அச்சம்
மதம் என்னும்பெயர் சொல்லி
மல்லுகட்டும் மனிதர்கள் கண்டு அச்சம்
ஜாதி என்று  கூச்சல் போடும்
கூட்டம்  கண்டு அச்சம்
அச்சம் அச்சம் அச்சம்
ஒண்டும் இல்லை மிச்சம் .........
~ அன்புடன் யசோதா ~

குயில் பாட்டு...


பாட்டு போட்டியில்
குயிலுக்கு முதல் பரிசு
கோபித்து கொண்டன ..
குருவிகளும்
ஏனைய  பறவைகளும்
மனிதர்கள் மீது .....
 ஏன் தெரியுமா ?
இனிமையான குரலுக்கு
உதாரணமாய் குயிலை
மட்டும் தேர்வு செய்வதால் ....
~ அன்புடன் யசோதா ~

என்னவனே ...




அழகிய பூவாய் நான்
எனக்குள் நீ இருப்பதால்
நானும் மிக அழகாய்
இதமான இசை நீ
புல் வெளியாய் நீ
பனித்துளியாய் நான்
பல ராகங்களை
கேட்கிறேன் நீ பேசும்போது
பனிக்கட்டியின் குளிர்ச்சியாய்
நீ என்னை பார்க்கும் போது
காற்றினில்  மிதக்கிறேன்
உன் கை பிடித்து நடக்கும்போது
உன்னால் காதல் சுகமானது .....
~ அன்புடன் யசோதா~

சூரியகாந்தி..


என் காதலா (சூரியன்)
நீ வரும் வழி பார்த்து நாணி கோணி
நிற்கின்றேன்....
காலை நேரம் உன்  பார்வையால்
லேசான சூடு தந்து
என்னை தலை நிமிர்ந்து நிற்க வைக்கிறாய்
நானும் உன்னை நேருக்கு நேர் பார்த்து
பரவசம் அடைகிறேன்
என் நுனி முதல் அடிவரை
மின்சாரம்  பாய்கிறதே
அந்த சுகம் முழுதாய் அனுபவித்து முடியும் முன்
ஏதோ கோபம் வந்தது போல்
சுள்ளென சுட்டெரிகிறாயே
நான் நிலைகுலைந்து போகிறேன்
கருகி போய்விடுவேனோ என துடிக்கிறேன்
என் துடிப்பு கண்டு மனமிரங்கி
கொஞ்ச நேரத்தில் ...உன் கோபம் தணித்து
இளம் காற்றை என் மீது வீச செய்து
என்னை தாலாட்டி உறங்க செய்து,,
மாலையில் மாயமாய் மறந்து விடுகிறாய்
இரவாகியதும் தனிமை என்னை வாட்டுகிறது
பனியும்,,குளுரும் என்னை நடுங்க செய்து
துவண்டும் சுருங்கியும் போகிறேன்
மீண்டும்  சீக்கிரம் விடிந்துவிட கூடாதா
என காத்திருக்கிறேன்
உன்னை பார்த்து சிரிக்க
நான் பூத்து விரிய  ...
அன்புடன் உன் சூரிய காந்தி ......
~ அன்புடன் யசோதா~

முதிர்கன்னி ...


ஏழை வீட்டு மூத்த பெண்ணாய்
அழகே இல்லாத துர்பாக்கியவதியாய் நானும்
அழகாய் நான்கு தங்கைகளும் ..
என்னை பெண்பார்க்க வந்தவர்களுக்கோ
தங்கைகளை மணமுடிக்க ஆசை
உள்ளுக்குள் அழுதும் ..புறம்  சிரித்தும்
சம்மதம்  சொன்னேன் தங்கைகள் வாழ்விற்கு
என் வயது தோழிகளுக்கோ ....
பள்ளியிலும் இடுப்பிலும் வயிற்றிலும் குழந்தைகள்
இரண்டாம் மூன்றாம் தாரமாய் கூட
என்னை மணமுடிக்க வருவாரில்லையே
யாரை குத்தம்சொல்லுவது
என்னை பெத்த தாய் தந்தையினயோ
அழகாய் என்னை படைக்க மறந்த இறைவனையோ
ஆசைகளையும்  ஏக்கங்களையும்
எனக்குள் புதைத்து
இரவெல்லாம் கண்ணீரால் என் தலையணையை நனைத்து
மௌனமாய் அழுகிறேனே
முதிர் கன்னி நான் ...
~ அன்புடன்  யசோதா ~

மனநோயாளி ..


உன்னை பார்த்த அந்த முதல் நாள்
உன்னுடன் பேசிய அந்த முதல் வார்த்தை
நாம் பரிமாறிகொண்ட அந்த கடிதங்கள்
நாம் பழகிய அந்த நாட்கள்
கடைசியாய் என்னிடம் விடை பிரிந்து
என்னை விட்டு விட்டு  போனபிறகு ..
நான் தனியாய் நின்று
குமுறி அழுத அந்த இடம்
இவைகள் மட்டும்தான் என் நினைவுகளில்
மனநோயாளியாய் நான்
இன்று மருத்துவமனையில்...
~ அன்புடன்​  யசோதா ~

பணம் ..

பணமே உன்னை வரம் என்பதா
இல்லை சாபம் என்பதா ..

சிலநாள் வாழ்கையில் வந்து வசந்தத்தை வீசுகிறாய்
பலநாள் வராமல் வறுமையில் வதக்கி எடுக்கிறாய்

பகலெல்லாம்   இரை  தேடும்
பறவையாய் அலைந்தும்
இரவாகியும் வீட்டை சேர மனமில்லை
ஏன் தெரியுமா ?

பிள்ளைகளின் தேவைகளை
தீர்க்கமுடியா பாவினானன்றோ
அவரின் முகம் காண மனமின்றி

பாதி இரவாகும் வரை காத்திருந்து
பிஞ்சு விழிகள் உறங்கும் எனத்தெரிந்தபின்னே

திருடனை போல பதுங்கி பதுங்கி
 வீட்டினுள் நுழைகிறேன் ....
கொஞ்சி மகிழும் தந்தை நான்  அஞ்சி நடுங்கி...

வறுமை நிழலவன்  என் கரம்பிடித்து நடக்கின்றான்
பணம் எனும் நல் நண்பன் கைபிடிக்கும் வரை
என்னைப்போல எத்தனைபேரோ தரணியில் ??????????



 ~ அன்புடன்  யசோதா ~

டைரி...



என்னவனே 
புரட்டி பார் என் டைரியின் பக்கங்களை
அதில் பல புதையல்களாக
பல ரகசியங்கள் ...
நீ என் அடிமனதில் இருப்பதால்
உன்னை பத்தியும் சில வர்ணனைகள்
வாழ்கையின் வலிகள்
மனிதர்களின் மனங்கள்
என் துன்பம் ,,என் இன்பம் ..என் காதல்

நான் செய்த தவறுகள் கூட 

எனக்கே மறந்த நிகழ்வுகள் 
புத்தம் புதிதாய் ..
பக்கங்கள் ஒவ்வொன்றும் 
காலம் நேரம் நாள் கணக்கில் ..
நகர்ந்த நாட்களும் ...
மறையாத எழுத்துக்களால் 

என் மறைவுக்கு பின் கூட
இந்த டைரி பேசும்
பல கதைகள் .......
~ அன்புடன்  யசோதா காந்த் ~

எனக்குள் ..



அதிகாலை நேரம்
கண்ணாடி சில்லுகளை
வட்ட வட்டமாய் செதுக்கி
விதைத்தது போல்
காணும் பனித்துளிகளில்
உன் முகங்கள் .....
~ அன்புடன் யசோதா ~

குப்பைதொட்டி...



வீடு தெருவோர  குப்பைகளையும்
மீந்துபோன கழிவுகளையும்
நாற்றம்  வீசும் அசுத்தங்களையும்
தேவை இல்லா பண்டங்களையும்
எனக்குள் வாங்கி கொள்கிறேன்
மகிழ்ச்சியாய் ,,,

நீங்கள் சுத்தமாகும் போது
நானோ  அழுக்காய்
ஆனந்தமாய் ,,,

குப்பையிடும் குப்பை தொட்டில் என்னில்
குழந்தைகளையும்  வீசும்
படுபாவிகள்தான் யார்  யாரோ ..??

சஞ்சலமில்லா சண்டாளர்களே
கத்தி கதறும் குழந்தையுடன் சேர்ந்து
உயிரற்ற  நானும் அழுகின்றேனே ...

இதை கேட்பாரில்லையோ ,,...
 இவைகளுக்கு தீர்வு காண்பாரில்லையோ...

கருவாய்  கலைக்காமல்
உருவாய் தந்து ...என்னுள் தொலைக்கும்
கருணையற்ற உருவே ...
இனியும் வேண்டாம் இதுபோல் கொடூரம்

................ஆதங்கத்துடன்  குப்பை தொட்டி


~அன்புடன் யசோதா காந்த் ~

பட்டினி










பத்திரிகைகளில் செய்தி
பட்டினி சாவு என்று
மனம் துடித்தது
இறைவா உன்னால் முடியும் என்றால்
பட்டினியால் கிடப்பவர்களை காப்பாத்து
இல்லை  குழந்தைகளாக்கு
மேலும் இரண்டு மார்பு கொடு எனக்கு
ரத்தத்தை பாலாக்கி பசித்தீர்கிக்றேன்
அவர்களின் பட்டினி சாவை தடுக்க ....
~அன்புடன்  யசோதா

விதவை ..



விதவைக்கு  மறுமணம்
மனிதர்களை விட மலர்களுக்குள் பெருமகிழ்ச்சி
ஏன் தெரியுமா ?
பூஜைக்காய் மட்டுமே பூக்களை  தொட்ட
பூவைக்கும் பூச்சூடும்
காலம் வந்தது ..
இனி  வரும் நாட்கள்  எல்லாம்
அவள் கார்கூந்தலில்
மலர்களின் அணிவகுப்பு
பூக்களின் படையெடுப்பு
குதுகலித்தன மலர்கள் ....
~ அன்புடன்   யசோதா ~

கைரேகை ..



கை பாத்து குறி சொல்லும்
நரிக்குறத்தி  பொண்ணு வந்தா
எல்லாருக்கும் கை பாத்து
கணக்கா குறி சொன்னா
வேலப்பன் பொண்ணு முனியம்மாக்கு
கை காட்டி எதிர்காலம் கேட்டு  குறி பாக்க ஆசை ..

முந்தானைல முடிச்சு வச்ச
சில்லறைய எடுத்து குறி கேக்க போனா
கை நீட்ட சொன்னா
குறி பாக்கும்  குறத்தி
பாவிமக கையில கைரேகை  இல்ல
நாலஞ்சு வீட்டு பத்து பாத்திரம் தேச்சு
கைரேகை எல்லாம் காணாம ...போச்சு
 ~ அன்புடன்  யசோதா ~

பட்டு பாவாடை..




இந்த பட்டு பாவாடை
எனக்குத்தானே
என் கேட்ட மகளிடம் ....
எப்படி சொல்வது ...
இது வெள்ளாவிக்கு வந்த
மேலதெரு மாமி வீட்டு
துணி என்று....
~ அன்புடன்  யசோதா  ~

காதல்..




கல்லாதவனையும்
கவிதை
சொல்ல சொல்லி மேதையாக்கும்..
கருணை இல்லாதவனையும்
கனிவாய் பேசவைக்கும்
இல்லாத ஒன்றை
இருப்பதாக காட்டும்
கண்களிலே கனவுகளையும்
நெஞ்சினிலே எதிர்பார்ப்புகளையும்
வைத்துகொண்டு
கண்மூடித்தனமாய் பறக்கவைக்கும்
புது உணர்வுக்கு பெயர்தான் காதலோ .........
                      ~ அன்புடன்  யசோதா ~

கருப்பு வெள்ளை ...

   
அன்பே
என் கண்களில்
ஏதோ கோளாறு என்று நினைகிறேன்
கண் மருத்துவரிடம் போக வேண்டும்
ஏன் தெரியுமா ?????
நான் காணும் யாவும்
கருப்பு வெள்ளையாய்
தெரிகிறது....ஆனால்
நீயும்...உன் நினைவுகளும் ..
நம்மை பற்றி ..
நான் காணும் கனவுகளும்
வண்ண வண்ண நிறங்களாய்
என் கண்களில் .....
~ அன்புடன் யசோதா ~

எங்க வீட்டு வாசற்படி...



வீட்டுக்கு வாசல் படியும் திண்ணையும் அழகோ அழகு
ஆயிரம்நினைவுகளை  சொல்லும் பழைய வீடும் முற்றமும்
எனக்கு மட்டுமல்ல அம்மாவுக்கும் தோழி வாசல் படியே
தலை வாரி விடும்போதும் ...
கீரை ஆய்ந்து அரிசியில் கல்பொறுக்கும்போதும்...
வேலைகள் முடிந்து பக்கத்துவீட்டு மாமியிடம் ஊர்கதைகள் பேசும் போதும் அப்பாவிற்க்காய் காத்து இருக்கும் போதும்  ...
சண்டை குழப்பம் தீர சாய்ந்து உக்காரும்போதும் ...
மல்லிகை சூடி விளக்கேத்தும்போதும்....
வாசல்படிதானே ....அனைவருக்கும் தோழி  ...
எனக்குமட்டுமா...
எல்லோருக்குமே ...வாசல்படியில் கதைகள் உண்டே ...
நாகரீகம் கூடிபோனதாலே
வாசற்படியும் திண்ணையும் இல்லா
அடுக்கு மாடியில் குடித்தனம்
கண்மூடி கற்பனையாய் இல்லாததை இருப்பதாக
கண்ணில் நிறுத்தி பார்க்கிறேன் ...நான்
 எனில் நீங்களோ ?//??????????????????????
~அன்புடன் யசோதா காந்த்~












வெட்கம்..


அழகிய கண்கள்
எடுப்பான நாசி
சிவந்த கன்னங்கள்
இதழ்களை வர்ணிக்கவோ வார்த்தைகள் இல்லை
இடை அது இல்லவே இல்லை
இப்படி அவளை வர்ணித்து கொண்டே
இருக்கலாம் ..
ஆண் பெண் இருபாலரும் உற்று நோக்கியும்
வெட்கம் இல்லை
அந்த துணிக்கடை பொம்மைக்கு (பெண்ணுக்கு) ...
~ அன்புடன்  யசோதா ~

வண்ணம்


உடுத்தினால்
ஏழு வண்ணத்தில் தான்
ஆடை உடுத்துவேன் என்று
அடம்பிடித்தாள்
வானவில் மங்கை .....
~ அன்புடன் யசோதா ~

மௌனவிரதம்...




நானும் இருந்தேன் மௌனவிரதம்
சிலமணிநேரங்கள் ...
அப்பப்பா முடியவில்லை ...
அப்பொழுதுதான் ஊமையின் தவிப்பு புரிந்தது ....
இறைவா உன்னால் முடிந்தால்
அவர்களுக்கு பேசும் சக்தி கொடு ..
இந்த மானிட பிறப்பின் மகிமையை பேசி மகிழட்டும்....
~ அன்புடன்  யசோதா ~

அன்பு ...



அன்பு பொய் சொல்வதில்லை
அன்பு பொறாமை கொள்வதில்லை
அன்பு எரிச்சல் அடைவதில்லை
அன்பு தீங்கு செய்வதில்லை
அன்பு சினம் கொள்வதில்லை
அன்பு பழி போடுவதில்லை
அன்பு பகைமை கொள்வதில்லை
அன்பு பாகு பாடு  பார்ப்பதில்லை
அன்புக்கு உயர்வு தாழ்வு இல்லை
அன்புக்கு ஏழை பணக்காரன் இல்லை
அன்புக்கு ஜாதி மதம் இல்லை
அன்புக்கு மொழி வேறுபாடு இல்லை ..
~ அன்புடன் யசோதா .. ~

அக்கா ..




தாய் சுமந்தாள் எனை பத்து மாதம்
ஆனால் நான் நடை பயிலும் வரை
என்னை இடுப்பில் வைத்து சோறூட்டி
தோளில் போட்டு தலாட்டி
என்னை சிரிக்க வைத்து
என் காதோரத்தில்  கதை சொல்லி
மகிழ்ந்த   அவளும்
எனக்கு தாய் போலத்தான் ,,,,,என் அக்கா..........
~ அன்புடன்  யசோதா ~

மலடி ...




ஆணென்றும் பெண்ணென்றும்
ஆண்டுக்கொரு மகப்பேறு 
அளவில்லா பூரிப்பும் 
எல்லையில்லா ஆனந்தமும் ..

பிள்ளைகள் வளரும் அழகை 
ஆயிரம் கண்கொண்டு கண்டு ரசித்தாள்
விளையாட்டு பொருட்களையோ 
பொக்கிசமாய் பாதுகாத்தாள்..

சுவற்றில் குழந்தைகளின் கிறுக்கல்களை 
சுண்ணாம்பு பூசாமல்..ஓவியமாக்கினாள்

 பட்டம் பெற்றபோதும் ..பதவிகள் அடந்தபோதும் 
பால் கொடுத்த முலைகளும் ..
கருவை வளர்த்த கருவறையும் 
 மகிழ்ந்து ...கொண்டாடியது ...



மலடியாகவே இருந்திருக்கலாமே என
மனம் கசந்தாள் ..
அடைக்கலமாய் முதியோர் இல்லத்தை
அடைந்த போது ....

~ அன்புடன் யசோதா ..~